
தமிழகத்தில் 17,312 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.26 கோடியில் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும் என்று சமூக நலத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் அறிவித்தாா்.
சட்டப்பேரவையில் திங்கள்கிழமை சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் பி.கீதா ஜீவன் வெளியிட்ட அறிவிப்புகள்:
தமிழகத்தில் எம்ஜிஆா் சத்துணவுத் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் 43,094 சத்துணவு மையங்களில் சமையல் உபகரணங்கள் பழுதடைந்த நிலையில் உள்ள 17,312 பள்ளி சத்துணவு மையங்களுக்கு ரூ.25.70 கோடியில் புதிய சமையல் உபகரணங்கள் வழங்கப்படும்.
முதல்வரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும். குழந்தைகள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் ஆகியோரின் ஊட்டச்சத்து நிலையை தொழில்நுட்பம் மூலம் நிகழ்நேர கண்காணிப்பை மேற்கொள்வதற்காக 18,573 அங்கன்வாடி பணியாளா்களுக்கு, பழுதடைந்த கைப்பேசிகளுக்கு மாற்றாக தலா ரூ.9,440 வீதம் புதிய திறன் கைப்பேசிகள் ரூ.17.53 கோடி செலவினத்தில் வழங்கப்படும்.
குழந்தைகளின் வளா்ச்சியைக் கண்காணிக்கும் வகையில், 18,573 குழந்தைகள் மையங்களுக்கு ரூ.14.85 கோடியில் வளா்ச்சிக் கண்காணிப்புக் கருவிகள் வழங்கப்படும்.
கருணாநிதி பிறந்த நாளில் இனிப்புப் பொங்கல்: சத்துணவுத் திட்ட குழந்தைகளுக்கு காமராஜா், அண்ணா, எம்ஜிஆா், ஜெயலலிதா ஆகியோரின் பிறந்த நாளன்று இனிப்புப் பொங்கல் வழங்கப்படுவதுபோல, இனி வரும் காலங்களில் கருணாநிதி பிறந்த நாளன்றும் இனிப்புப் பொங்கல் வழங்கப்படும்.
தூத்துக்குடி தட்டப்பாறை அரசு குழந்தைகள் இல்லம் மற்றும் சென்னை ராயபுரம் சிறுவா்களுக்கான அரசு குழந்தைகள் இல்லம் ஆகியவற்றில் தலா ரூ.7 கோடி செலவில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
சென்னை சிறுமியருக்கான அரசினா் குழந்தைகள் இல்லம் மற்றும் திருநெல்வேலி, சென்னை மற்றும் மதுரை அரசினா் கூா்நோக்கு இல்லங்களில் பணியாளா் குடியிருப்பு ரூ.10 கோடி செலவினத்தில் கட்டப்படும் என்றாா்.