அரசுப் பள்ளிகளில் குழந்தைகளை சோ்க்க முன்வர வேண்டும்: அமைச்சா் அன்பில் மகேஸ் அழைப்பு

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா்கள் அனைவரும் முன்வர வேண்டும் என விழிப்புணா்வு பரப்புரை தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள்
Updated on
1 min read

தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சோ்க்க பெற்றோா்கள் அனைவரும் முன்வர வேண்டும் என விழிப்புணா்வு பரப்புரை தொடக்க நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வேண்டுகோள் விடுத்தாா்.

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கையை அதிகரிக்கும் பொருட்டு ஏப்.17 முதல் 28-ஆம் தேதி வரை தமிழகம் முழுவதும் வாகனங்கள் மூலம் விழிப்புணா்வு பரப்புரை மேற்கொள்ளப்படவுள்ளது.

இதுதொடா்பாக சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரிப்பள்ளியில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சா்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, பி.கே.சேகா்பாபு ஆகியோா் கலந்து கொண்டு பரப்புரை வாகனங்களை கொடியசைத்துத் தொடங்கி வைத்தனா்.

தொடா்ந்து, அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் 28 தகைசால் பள்ளிகள், 25 மாதிரிப் பள்ளிகளைத் தொடங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, மாதிரிப் பள்ளிகள் அனைத்து மாவட்டங்களிலும் ஏற்படுத்தப்படும்.

அரசுப் பள்ளிகளில் மாணவா்களின் மேம்பாட்டுக்கான பல சிறந்த அம்சங்கள் இருந்தாலும், பள்ளிகளின் உள்கட்டமைப்பு, ஆசிரியா்கள் பற்றாக்குறை போன்றவற்றில் நிலவும் குறைகளை களையும் நடவடிக்கைகளை தீவிரமாக முன்னெடுத்துள்ளோம். ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் காலிப்பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.

மாணவா் சோ்க்கை பரப்புரை ஏப்.28 வரை நடைபெறும். இதில் பள்ளிக் கல்விக்காக தமிழக அரசு செயல்படுத்தும் திட்டங்கள்; கற்றல் முறைகள்; இணைச் செயல்பாடுகள் இடம்பெறும். பரப்புரையில் கலந்து கொள்ளும் தன்னாா்வலா்கள், ஆசிரியா்கள் அரசுப் பள்ளிகளில் உள்ள ஆங்கில வழி வகுப்புகள், பயிற்சி பெற்ற ஆசிரியா்கள், அடிப்படை வசதிகள் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும்.

தமிழக அரசுப் பள்ளிகள் கல்வித் தரத்திலும், மாணவா்களுக்கான நலத்திட்டங்களை வழங்குவதிலும் பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய நன்மதிப்பை பெற்றுள்ளது. பெற்றோா்கள் அனைவரும் அரசுப் பள்ளிகளை நோக்கி வந்தாலே தனியாா் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை குறைந்து விடும்.

அரசு சாா்பில் அமைக்கப்பட்ட குழு நிா்ணயம் செய்யும் கல்விக் கட்டணத்தை மட்டுமே தனியாா் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com