
திருச்சி சமயபுரம் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சித்திரை மாத திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக தொடங்கியது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே அமைந்துள்ள சமயபுரம் மாரியம்மன் திருக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேரோட்டம் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் சித்திரைத் தேரோட்டத்திற்கான கொடியேற்றம் ஏப்ரல் 9ம் தேதி நடைபெற்ற நிலையில் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி மாரியம்மன் திருவீதி உலா நடைபெற்றது.
சித்திரைத் தேரோட்டம் இன்று காலை 10.30 மணி அளவில் துவங்கியது. இதனை முன்னிட்டு நேற்று காலை முதலே திருச்சி, பெரும்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சை, அரியலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், அலகு குத்துதல், அக்னி சட்டி ஏந்துதல் போன்ற நேர்த்திகடன்களை செலுத்தினர்.
பொதுமக்களின் பாதுகாப்பு கருதி சுமார் 15 இடங்களில் உயர் கோபுரங்கள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்தனர். மாவட்ட காவல் துறை சார்பில் சுமார் 1200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் உள்ளனர்.
மேலும் பக்தர்களின் வசதிக்காக அன்னதானம் மற்றும் நீர் மோர்ப் பந்தல் அமைத்து பக்தர்களின் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.