அரசு அலுவலருக்கே இந்த நிலை எனில் பாமர மக்களுக்கு பாதுகாப்பு எப்படி வழங்க முடியும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி, தூத்துக்குடியில் முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிக்கிறது.
அரசு அலுவலகருக்கே இந்த நிலை என்றால், பொதுமக்களின் நிலை என்னவாகும். சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டிய முதல்வர் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள முறப்பநாடு கிராம நிர்வாக அலுவலராக லூர்து பிரான்ஸிஸ் பணியாற்றி வந்தார்.
இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் ரோந்து சென்றிருந்தபோது, அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் ஆற்று மணலை கடத்திச் சென்றதைத் தடுத்து நிறுத்தி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
இந்நிலையில், லூர்து பிரான்ஸிஸ் இன்று தனது அலுவலகத்தில் பணிபுரிந்துகொண்டிருந்தபோது, அலுவலகத்தில் புகுந்த மர்ம நபர்கள், அரிவாளால் சரமாரியாக அவரை வெட்டியுள்ளனர். இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக ஒருவரை கைது செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. தலைமறைவாகியுள்ள குற்றவாளிகளைத் தேடும் பணியில் காவல் துறையினர் ஈடுபட்டுள்ளனர்.