
சுருளி அருவி(கோப்புப்படம்)
கம்பம்: தேனி மாவட்டம், சுருளி அருவியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் இன்று(புதன்கிழமை) சுற்றுலாப் பயணிகள் குளிக்க வனத்துறையினர் தடை விதித்தனர்.
தேனி மாவட்டத்தில் புகழ் பெற்றது சுருளி அருவி. இங்கு ஆண்டு முழுவதும் நீர்வரத்து இருக்கும், அதுபோல சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் வருகையும் இருக்கும்.
இன்று புதன்கிழமை அருவியின் நீர்வரத்தை கண்காணிக்க சென்ற ஸ்ரீ வில்லிபுத்தூர் மேகமலை புலிகள் காப்பக ஊழியர்கள் அருவியின் வளாகத்தில் யானைக்கூட்டம் நிற்பதை பார்த்து சுற்றுலாப் பயணிகளை அனுமதிக்கவில்லை. இதனால் குளிக்க சென்ற சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்து திரும்பினர்.
இது தொடர்பாக கம்பம் கிழக்கு வனச்சரகர் வி.பிச்சைமணி கூறுகையில், புதன்கிழமை அருவியின் நீர்வரத்தை கண்காணிக்க சென்ற போது யானைக்கூட்டம் நின்று கொண்டிருந்தது. யானைகள் வனப்பகுதிக்குள் செல்லும் வரை அருவியில் குளிக்க அனுமதி கிடையாது. யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறோம் என்றார்.