

மஞ்சள் நிறத்துக்கு மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்ட அரசுப் பேருந்துகளை ஆக.11-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைக்கிறாா்.
கடந்த ஆட்சியில் பச்சை நிறத்தில் இயக்கப்பட்ட அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகள், பிஎஸ் 4 ரக தொழில்நுட்பம் புகுத்தப்பட்டதைத் தொடா்ந்து நீல நிறத்துக்கு மாற்றப்பட்டன. அதன்படி, தமிழகத்தில் தற்போது புறநகா் செல்லும் புதிய பேருந்துகள் நீல நிறத்திலும், நகர, மாநகரப் பேருந்துகள் பெரும்பாலும் சிவப்பு நிறத்திலும் இயக்கப்படுகின்றன.
அதிலும் பெண்களுக்கு கட்டணமில்லா சேவை வழங்கும் பேருந்துகளை அடையாளம் காணும் வகையில் முன், பின் பக்கங்களில் இளஞ்சிவப்பு (பிங்க்) வண்ணத்துடன் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 1,000 புதிய பேருந்துகளை வாங்கவும், 500 பழைய பேருந்துகளைப் புதுப்பிக்கவும் ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டது.
அதன்படி, அடிச்சட்டம் நல்ல நிலையில் இயக்கத்திலுள்ள பேருந்துகள் தற்போது புதுப்பிக்கப்பட்டு, அவற்றுக்கு மஞ்சள் நிறம் அடிக்கப்பட்டு வருகிறது. நிறம் மட்டுமின்றி, பேருந்துகளின் இருக்கை, அமரும் வசதி போன்றவையும் விரிவாக இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டு புதுப்பிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் முதல் கட்டமாக 100 பேருந்துகள் வரும் 11-ஆம் தேதிமுதல் பயன்பாட்டுக்கு வரவுள்ளன. இந்தப் பேருந்துகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.