
கோவையில் இருந்து தேனிக்கு பணி மாறுதல் வழங்கக்கோரி 6 மாத குழந்தையை, அமைச்சர் சிவசங்கர் காலடியில் வைத்து கோரிக்கை வைத்த அரசுப் பேருந்து ஓட்டுநர் கண்ணன் சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்தில் ஓட்டுநராக பணியாற்றி வரும் கண்ணனின் சொந்த ஊர் தேனி. இவருக்கு ஆறு வயதில் ஒரு பெண் குழந்தையும், ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனா். இவரது மனைவி டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த சில மாதங்களுக்கு முன்பு உயிரிழந்தாா். இவரது இரண்டு பெண் குழந்தைகளையும், அவரது பெற்றோா் பராமரித்து வருகின்றனா். அவா்களும் வயதானவர்கள் என்பதால் குழந்தைகளைப் பாா்த்துக்கொள்ள முடியவில்லை.
இதையடுத்து கோவையில் பணியாற்றும் தன்னை தேனிக்கு பணியிடம் மாற்றம் செய்யுமாறு பொது மேலாளரிடம் பலமுறை கண்ணன் கோரிக்கை விடுத்தும் பயனில்லை.
இந்த நிலையில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம், கோவை மண்டலத்துக்குட்பட்ட சுங்கம் பகுதியில் உள்ள போக்குவரத்து பணிமனைகளில் பணிக் காலத்தில் உயிரிழந்த பணியாளா்களின் வாரிசுகளுக்கு பணி வழங்குதல், பணியாளா்களின் குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் தனது 6 மாத குழந்தையை, அமைச்சர் சிவசங்கர் காலடியில் வைத்து கோவையில் இருந்து தேனிக்கு பணி மாறுதல் வழங்கக்கோரி ஓட்டுநர் கண்ணன் கோரிக்கை வைத்தார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில், ஓட்டுநர் கண்ணன் சொந்த ஊரான தேனிக்கு பணியிட மாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
தேனி சென்றுள்ள கண்ணன், நாளை கோவை கிளையில் பணி மாறுதலுக்கான உத்தரவு நகலை பெறுகிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.