அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்பட.. புதுப் பொலிவுபெறும் 6 பேருந்துநிலையங்கள்

அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவிக நகர் உள்ளிட்ட சென்னை நகரில் அமைந்துள்ள 6 பேருந்து நிலையங்கள் விரைவில் கண்ணைக் கவரும் வகையில் புதிய தோற்றத்துக்கு மாறவிருக்கின்றன.
அம்பத்தூர் தொழிற்பேட்டை உள்பட.. புதுப் பொலிவுபெறும் 6 பேருந்துநிலையங்கள்


சென்னை: அம்பத்தூர் தொழிற்பேட்டை, திருவிக நகர் உள்ளிட்ட சென்னை நகரில் அமைந்துள்ள 6 பேருந்து நிலையங்கள் விரைவில் கண்ணைக் கவரும் வகையில் புதிய தோற்றத்துக்கு மாறவிருக்கின்றன.

சென்னையில் உள்ள ஆறு பேருந்து நிலையங்களை தேர்வு செய்திருக்கும் சென்னை மாநகராட்சி மேம்பாட்டுக் கழகம், அவற்றை புதிய கட்டடக் கலையுடன் வடிவமைத்து, நவீன வசதிகளுடன் மேம்படுத்த முடிவு செய்துள்ளது.

இதற்காக தேர்வு செய்யப்பட்டிருக்கும் பேருந்து நிலையங்களின் பட்டியலில் திருவிக நகர், தொண்டையார்பேட்டை, கண்ணதாசன் நகர், முல்லை நகர், பெரியார் நகர், அம்பத்தூர் தொழிற்பேட்டை ஆகிய பேருந்துநிலையங்கள் இடம்பெற்றுள்ளன.

பொதுவாக, உடைந்த அழுக்கா சுவர், குடிநீர், கழிப்பறை வசதிகள் இல்லாமல் எப்போதும் அழுக்கடைந்து காணப்படும் இந்த பேருந்து நிலையங்கள், புதிய பொலிவுடன் ஜொலிக்கப் போகிறது.

மிக அழகிய மேற்கூரை, சூரிய தகடுகள் பொறிக்கப்பட்டு, சூரிய ஒளி மின்சாரம் மூலம் இயக்கும் விளக்குகள், மிக சுத்தமான கழிப்பறைகள், பயணிகள் அமருவதற்கு இருக்கைகள், குடிநீர் வசதி, காத்திருப்பு அறை, சிசிடிவி கேமராக்கள், சிறிய கடைகள் என பல வசதிகளுடன் இந்த பேருந்து நிலையங்கள் விரைவில் தயாராகவிருக்கின்றன.

ஏற்கனவே, திருவிக நகர் மற்றும் அம்பத்தூர் தொழிற்பேட்டை பேருந்து நிலையங்களை மேம்படுத்துவற்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. இந்த திட்டங்கள் அனைத்தும் ரூ.50 கோடியில் செயல்படுத்தப்படவிருக்கிறது. இது வரும் 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஒவ்வொரு பேருந்துநிலையத்துக்கும் தனித்துவமான கட்டட வடிவமைப்பை சிஎம்டிஏ இறுதி செய்திருக்கிறது. அனைத்து பேருந்துநிலையங்களும் அதிகமான பேருந்துகளை நிறுத்தும் வசதியுடன் உருவாக்கவிருக்கிறது. சில பேருந்து நிலையங்களில், நடத்துநர், ஓட்டுநர்களுக்கு தனி ஓய்வறைகள் மற்றும் கழிப்பறைகள் கட்டவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த பேருந்துநிலையங்களை கட்டுவது பெரிய வேலை இல்லை, அவற்றை முறையாக பராமரிக்க வேண்டும். அதுதான் முக்கியம் என்கிறார்கள் பொதுமக்கள். எனவே, கட்டுமானத்தோடு, பராமரிப்புப் பணியையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கிறார்கள்.

வட சென்னை மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகவே, இந்த ஆறு பேருந்து நிலையங்களும் மேம்படுத்தப்படுகின்றன. விரைவில் வடசென்னைக்கு புதிய முகம் கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com