களக்காடு: திருநெல்வேலி மாவட்டம், நான்குனேரி அருகே சனிக்கிழமை காலை மின்கம்பத்தில் பைக் மோதி விபத்துக்குள்ளானதில் களக்காட்டைச் சேர்ந்த இளைஞர்கள் 2 பேர் பலியாகினர்.
களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் சேதுராயபுரத்தைச் சேர்ந்தவர் ஜீவானந்தம் மகன் மந்திரமூர்த்தி (34). அதே பகுதியைச் சேர்ந்த இவரது உறவினர் செல்லத்துரை மகன் ரகுவரன் (26) உடன் பைக்கில் களக்காட்டில் இருந்து திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தனர். பைக்கை ரகுவரன் ஓட்டி வந்துள்ளார். பைக் நான்குனேரி தனியார் நூற்பாலை அருகே சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் இருந்த மின்கம்பத்தில் பலமாக மோதி விபத்துக்குள்ளானது.
இதில், பைக்கில் பின்னால் அமர்ந்திருந்த மந்திரமூர்த்தி பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். உயிருக்கு ஆபத்தான நிலையில் ரகுவரன் திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார். இருவரது உடல்களும் உடல் கூறாய்வுக்காக திருநெல்வேலி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
விபத்து குறித்து நான்குனேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.