மாற்றுத்திறனாளிகள் நாள்: முதல்வர் வாழ்த்து

டிசம்பர் 3 ஆம் தேதி  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 
கோப்புப் படம்
கோப்புப் படம்
Updated on
1 min read

டிசம்பர் 3 ஆம் தேதி  சர்வதேச மாற்றுத்திறனாளிகள் நாளையொட்டி முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி:

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் மாதம், 3-ஆம் நாள் அனைத்து நாடுகளிலும் அனுசரிக்கப்படுகிறது. மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாத்து, அவர்கள் சுயமரியாதையுடன் சமுதாயத்தில் இணைந்து வாழ நாம் அனைவரும் ஒத்துழைப்பு நல்க வேண்டிய அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

நமது அரசு, மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் முதல் நடவடிக்கையாக மாற்றுத்திறனாளிகளின் உடல் ரீதியான குறைபாடுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தடுக்கவும், சிறப்புக் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி  வழங்கவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக செயல்படுத்தப்படும் பிற நலத்திட்டங்களுக்காகவும் வழங்கப்படும் நிதியினை இந்த அரசு உயர்த்திக் கொண்டே வருகிறது. 

இதன்மூலம் மாற்றுத்திறனாளிகளின் சமூக, பொருளாதார வளர்ச்சி மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது. மாத பராமரிப்பு உதவித்தொகை ரூ .2000/- என உயர்த்தி வழங்கியும், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் வாயிலாக மறுவாழ்வு இல்லங்கள் அமைக்கும் பல புதிய முன்னெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றன.

மேலும், சமுதாயத்தில் மாற்றுத்திறனாளிகள் முழு பங்கு வகிக்கும் வகையில் பொதுக் கட்டடங்களில் தடையற்ற சூழல் அமைத்தல், நவீன உதவி உபகரணங்கள் வழங்குதல் போன்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அனைத்து மறுவாழ்வு உதவிகளும் மாற்றுத்திறனாளிகள் விருப்பத்திற்கு ஏற்றவாறு அவர்கள் வசிக்கும் இருப்பிடம் மற்றும் சமுதாயத்திலேயே கிடைக்கும் வகையில் கோட்ட அளவில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் அமைக்கும் பணியும் "உரிமைகள் திட்டம்" மூலம் செயல்படுத்திட  நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறாக நமது தமிழ்நாடு அரசு, ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் உறுதி ஏற்றுள்ள, "எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும்", "சமுதாயத்தில் ஒருவரும் விடுபடக்கூடாது" ("LEAVE NO ONE BEHIND") போன்ற கொள்கைகளை பின்பற்றும் வகையில் செயல்பட்டு வருகிறது.

எனவே, இந்த நாளில் "மாற்றுத்திறனாளிகளுக்கான நிலையான நீடித்த இலக்குகளை அடைந்திடவும், அவர்களின் நலனை பாதுகாக்கவும் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம்" என  அனைவரும் ஒன்றிணைந்து  உறுதி  ஏற்போம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com