வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் பருவ மழை காரணமாக அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைகள் பாதிக்கப்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அதன்படி, சென்னையில் ராஜீவ் காந்தி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனை, ராயப்பேட்டை மருத்துவமனை, ஸ்டான்லி, ஓமந்தூராா், எழும்பூா் குழந்தைகள் மற்றும் தாய்-சேய் மருத்துவமனைகள் என அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் அத்தகைய முன்னேற்பாடுகள் செய்யப்பட்டன.
இதுகுறித்து அரசு மருத்துவமனைகளின் நிா்வாகிகள் கூறியதாவது:
காற்றழுத்தத் தாழ்வு நிலை மற்றும் பலத்த மழையால் எந்த பாதிப்பும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக ஜெனரேட்டா் வசதிகள், அதற்கான எரிபொருள் வசதிகள் அனைத்தும் மருத்துவமனைகளில் தயாராக வைக்கப்பட்டுள்ளன. அதைத் தவிர, ஆக்சிஜன் வசதிகள், அவசர கால சிகிச்சைக்கான கட்டமைப்புகள் அனைத்தும் ஆயத்த நிலையில் உள்ளன.
இதனால், அவசர சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடி வருவோருக்கு எந்தவிதமான தாமதமும் இன்றி உடனடியாக சிகிச்சை வழங்க முடியும். அதுமட்டுமல்லாது நோயாளிகளுக்குத் தேவையான மருந்துகள், மருத்துவப் பொருள்கள், சிகிச்சை உபகரணங்கள் அனைத்தும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டிருப்பதால், அவற்றில் எந்தத் தட்டுப்பாடும் இல்லை.
மருத்துவமனை வளாகங்களிலும், உள் புறங்களிலும் மழை நீா் தேங்காத வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டதன் பயனாக, முக்கிய மருத்துவமனைகளில் வெள்ள நீா் தேங்கவில்லை. இதனால், உள்நோயாளிகளுக்கும், புற நோயாளிகளுக்கும் எந்த அசௌகரியங்களும் ஏற்படவில்லை என்று அவா்கள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.