சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று காலை புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 230 கிலோ மீட்டர் தொலைவில் நிலைகொண்டுள்ளது. இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மற்றம் தமிழகத்தை ஒட்டி டிசம்பர் 4ஆம் தேதி வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு, சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4ஆம் தேதி திங்கள்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையல் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள டாஸ்மாக் கடைகள் நாளை செயல்படாது என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது. டாஸ்மாக் கடைகளில் நாளை விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்ட கடை பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுவார் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.