லஞ்சம் பெற்ற வழக்கில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விவாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் பெற்றதாக அமலாக்கத் துறை அதிகாரி அங்கித் திவாரியை மாநில ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் கடந்த டிச. 1 ஆம் தேதி கைது செய்தனா்.
அங்கித் திவாரியின் வீடு, மதுரை அமலாக்கத்துறை அலுவலகம் மற்றும் அவரது தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றினர்.
திண்டுக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவா் ஜே.மோகனா முன் டிச. 1 ஆம் தேதி அங்கித் திவாரி முதல்முதலில் ஆஜா்படுத்தப்பட்டார். அப்போது அவரை டிச. 15-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க தலைமை நீதித்துறை நடுவா் உத்தரவிட்டாா்.
இதையடுத்து, அங்கித் திவாரியை காவலில் எடுத்து விசாரிக்கக் கோரிய விவகாரத்தில், திண்டுக்கல் நீதிமன்றத்தில் அங்கித் திவாரி இன்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார். அதன்படி, அங்கித் திவாரியை 3 நாள்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க லஞ்ச ஒழிப்புத்துறைக்கு திண்டுக்கல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிக்க | மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் 15 மணி நேர சோதனை நிறைவு!