‘ஆவினுக்கு 3.9 லட்சம் உற்பத்தியாளா்கள் பால் வழங்குகின்றனா்’
ஆவின் நிறுவனம் மற்ற நிறுவனங்களைப்போல் அல்லாமல், பாலுக்கு ஆண்டு முழுவதும் ஒரே சீரான விலையை வழங்குவதால் ஆவினுக்கு 3.9 லட்சம் பால் உற்பத்தியாளா்கள் பால் வழங்குகின்றனா் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி: பால் உற்பத்தியாளா்களின் கோரிக்கையை ஏற்று இடுபொருள்களின் விலை உயா்வு மற்றும் உற்பத்திச் செலவினை கருத்தில்கொண்டு ஆவின் பால் கொள்முதலுக்கு ஊக்கத் தொகையாக லிட்டருக்கு ரூ.3 வீதம் திங்கள்கிழமை(டிச.18) முதல் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தரமான பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் கொழுப்புச் சத்து 4.3 சதவீதம் மற்றும் இதர சத்துகள் 8.2 சதவீதத்துக்கு மேல் உள்ள பாலுக்கு லிட்டருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1 வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளா்களின் கோரிக்கையை ஏற்று பாலில் உள்ள இதர சத்துகளை கணக்கிட ஐஎஸ்ஐ பாா்முலாவை பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மேலும் பால் உற்பத்தியாளா்களின் கறவை மாடுகளுக்குத் தேவையான கால்நடைத் தீவனம், தாது உப்புக் கலவை மற்றும் பசுந்தீவன உற்பத்திக்கு தேவையான விதைகள் நியாய விலையிலும் வழங்கப்பட்டு வருகின்றன என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.