மிக்ஜம் கனமழையால் மூழ்கி சேதமடைந்த வாகனங்களுக்கு இலவசமாக பழுதுபார்ப்பு பணியில் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்
கடந்த 3 ஆம் தேதி பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட சென்னையில் நிவாரண உதவிகளை மேற்கொண்டு வந்த மயிலாப்பூர் ராமகிருஷ்ண மிஷன் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஆசிரியர்கள் இப்பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.
தொடக்கத்தில் மக்களுக்கு உணவு பொட்டலங்கள், ரொட்டி போன்றவற்றை வழங்கினர். அடுத்தக்கட்டமாக ரூ. 1000 மதிப்பிலான மளிகைப்பொருள்களின் தொகுப்பு பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வழங்கப்பட்டது.
மேலும், மழையால் சேதமடைந்த இருச்சக்கர வாகனங்களுக்கு டிச. 13 ஆம் தேதி முதல் இலவசமாக ஆயில் சர்வீஸ் செய்து வருகின்றனர். மாணவர் இல்லத்தில் உள்ள பல்தொழில்நுட்ப கல்லூரியின் மூலம் இப்பணி நடைபெற்று வருகிறது.
குறிப்பாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் க்யூஆர் கோடு பதிக்கப்பட்ட துண்டு பிரசுரங்களை வழங்கியுள்ளதால் மக்கள் எளிதாக பதிவு செய்துக்கொண்டு தங்கள் வாகனங்களை கொண்டு வந்து சீரமைத்து கொள்கின்றனர்.
வாகனங்கள் சீரமைப்பு பணிக்காக ஓசூர், செங்கம், கள்ளக்குறிச்சி மற்றும் காஞ்சிபுரம் பகுதிகளில் இருந்து மெக்கானிக்குகள் வரவழைக்கப்பட்டு டி.வி.எஸ். கம்பெனி வல்லுநர்கள் தலைமையில் பணிகளை ராமகிருஷ்ண மிஷன் பல்தொழில்நுட்ப கல்லூரி ஆசிரியர்களும் மாணவர்களும் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: மனைவி உள்பட 3 பேரை அரிவாளால் வெட்டிய கணவர் விபத்தில் பலி
இதற்காக உதவி எண்கள் 9786339427, 9791070737 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இப்பணிகள் டிச. 18 ஆம் தேதி வரை தொடரவுள்ளதாகவும் மாணவர் இல்ல செயலர் சுவாமி சத்யஞானானந்தர் தெரிவித்துள்ளார்.