சிதம்பரம் கோவிலில் கனகசபை மீது பக்தர்களை தரிசனம் செய்ய அனுமதிக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என்று அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் இது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அமைச்சர் சேகர்பாபு, “உயர் நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்படி இரண்டு துணை ஆணையாளர்களும் கூடுதல் ஆணையாளர்களும் தொல்லியல் துறை சார்ந்த 3 பேரும் குழுவாக சென்று முழுமையாக ஆய்வு செய்து இருக்கிறார்கள். 30-க்கும் மேற்பட்ட விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளது. அவற்றை ஆய்வு செய்து நீதிமன்றத்தில் சமர்பிக்க உள்ளோம்.
“கனகசபை மீது பக்தர்கள் நின்று தரிசனம் செய்ய நீதிமன்றத்தில் தடையாணை கேட்டார்கள். நீதிமன்றம் தடை எதுவும் பிறப்பிக்கவில்லை. தற்போது ஆருத்ரா தரிசனத்தை காரணம் காட்டி அவர்களைத் தவிர வேறு யாரும் கனகசபையில் ஏறுவதற்கு தடை செய்து வருகிறார்கள்.
இதையும் படிக்க: அழகர்கோயிலில் இனி நாள் முழுவதும் பிரசாதம்
“மோதல் போக்கு வேண்டாம் என்பதற்காக காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறோம். கனகசபையில் பக்தர்களை அனுமதிக்காததால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்து இது குறித்து நீதிபதிகள் முன்பு தெரிவிக்க இந்து அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது எனத் தெரிவித்துள்ளார்.