சென்னை: பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும், தென்மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாகவும் வண்டலூா் அறிஞா் அண்ணா உயிரியல் பூங்கா அருகில் கிளாம்பாக்கம் ஜி.எஸ்.டி., சாலையில் 88.52 ஏக்கா் பரப்பளவில் 60 ஆயிரத்து 452 சதுர அடி பரப்பில் ரூ.400 கோடியில் பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகளுடன் புதிய பேருந்து முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்த கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிமை திறந்து வைத்தார்.
இங்கிருந்து நாள்தோறும் 2 ஆயிரத்து 310 பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைக் காலங்களில் பேருந்துகளின் எண்ணிக்கை கூடுதலாக இயக்க வாய்ப்புள்ளது. பேருந்து நிலைய வளாகத்தினுள் வெளியூா் மற்றும் மாநகர பேருந்துகள் மட்டுமல்லாமல் தனியாா் ஆம்னி பேருந்துகளும் வந்து செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | இந்தக் கொடுமையில் பிரதமருக்கும் பங்கிருக்கிறது!: ராகுல் காந்தி
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து தென்மாவட்டங்களுக்கு ஞாயிற்றுக்கிழமை முதல் விரைவுப் போக்குவரத்துக்கழக பேருந்துகள் முழுமையாக இயக்கப்படுவதால், சென்னை நகரின் பல்வேறு பகுதிகளிலிருந்து கிளாம்பாக்கத்துக்கு பயணிகள் வந்து செல்ல ஏதுவாக புதிய வழித்தடங்களிலும், ஏற்கெனவே உள்ள வழித்தடங்களிலும் கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில், பொங்கல் பண்டிகை வரை விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி ஆகிய 6 அரசு போக்குவரத்து கழகங்களுடைய பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
பொங்கலுக்கு பிறகு அனைத்து பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் என அரசு போக்குவரத்துக்கழகம் தெரிவிக்கப்பட்டுள்ளது.