திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே தனியார் பொறியியல் கல்லூரி விடுதியில் மாணவர் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக செவ்வாப்பேட்டை காவல் நிலைய காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.
திருவள்ளூர் அருகே அரவண்வாயல்குப்பத்தில் தனியார் பொறியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்தக் கல்லூரியில் ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம், காவலி பகுதியைச் சேர்ந்த மேதரமெட்லா பிட்சி ரெட்டியின் மகன் மேதராமெட்லா சரண்(18) பி.இ முதலாம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் வழக்கம் போல் கல்லூரி வகுப்புக்கு சென்றுவிட்டு, அந்த வளாகத்தில் உள்ள விடுதிக்கு வெள்ளிக்கிழமை சென்ற நிலையில், இரவில் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சக மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் அளித்தனர். அதைத் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.
அதைத் தொடர்ந்து காவல் ஆய்வாளர் பாஸ்கர் மற்றும் போலீசார் உடலைக் கைப்பற்றி திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இதற்கிடையே கல்லூரி முதலாம் ஆண்டு மாணவர் கல்லூரி விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்தக் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பெரும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளன.