சென்னை பெசன்ட் நகர் மின்மயானத்தில் மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராம் உடலுக்கு 30 குண்டுகள் முழங்க உடல் தகனம் செய்யப்பட்டது.
இந்தியத் திரையுலகின் புகழ்பெற்ற இசைக்குயிலாக விளங்கிய பின்னணிப் பாடகி வாணிஜெயராம் (78) தவறி விழுந்து இயற்கை எய்தினார். நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ள வாணி ஜெயராம் உடலுக்கும் தலைவர்கள், திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருந்தனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி, டிரம்ஸ் சிவமணி, ஓய்.ஜி. மகேந்திரன் உள்ளிட்டோர் நேரில் வந்தது அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை நேரில் வந்து மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
பின்னர், இந்தியாவின் புகழ்பெற்ற இசைக் கலைஞர் வாணிஜெயராம் இசைப் பணிகளை கெளரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
இந்நிலையில், அவரது இறுதி ஊர்வலம் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கியது. பாடகி வாணி ஜெயராம் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக, 3 தேசிய விருதுகள் மற்றும் பல மாநில அரசுகளின் விருதுகள் பெற்ற வாணி ஜெயராம் உடலுக்கும் 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.
வாணி ஜெயராம், கடந்த 1974 ஆம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார்.
பின்னர், தமிழ், தெலுங்கு. கன்னடம், மலையாளம், மராத்தி, குஜராத்தி, வங்காளம், ஒரியா என பல்வேறு மொழிகளில் பாடியுள்ளார்.
அவர், இசையமைப்பாளர்கள் எம்.எஸ். விஸ்வநாதன், இளையராஜா தொடங்கி ஏ.ஆர். ரகுமான் வரையிலான பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடியிருக்கிறார். பக்தி பாடல்களையும், தனி ஆல்பங்களையும் அவர் பாடியுள்ளார்.
சமீபத்தில் மத்திய அரசு சார்பில் இவருக்கு பத்ம பூஷண் விருது அறிவிக்கப்பட்டது.