

சென்னை: சென்னை அருகே திரிசூலத்தில் உள்ள நித்தியானந்தா ஆசிரமம் மீது கல் வீசி தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
கர்நாடகம் மாநிலம் பிடதியில் ஆசிரமம் வைத்து நடத்தி வந்த நித்தியானந்தா, தனது சீடர்கள் சிலருடன் கடந்த 2019 ஆம் ஆண்டு இந்தியாவை விட்டு வெளியேறினார். இதன் பின்னர் அவர், கைலாசா என்ற ஒரு தீவை விலைக்கு வாங்கி, அங்கு குடியேறிவிட்டதாக கூறப்படுகிறது.
அவ்வபோது சமூக ஊடகங்களில் தோன்றி நித்தியானந்தா பேசி வருகிறார். அதேவேளையில் பிடதி, தமிழகத்தில் பல்வேறு இடங்களில் உள்ள அவரது ஆசிரமங்களை நித்தியானந்தாவின் சீடர்கள் நிர்வகித்து வருகின்றனர்.
இதில், நித்தியானந்தாவுக்கு சென்னை அருகே திரிசூலம் மலைமகள் நகரில் ஒரு ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரமத்தை அவரது சீடர்களே கவனித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த ஆசிரமத்துக்கு செவ்வாய்க்கிழமை நள்ளிரவு வந்த சில மர்ம நபர்கள், தொடர்ச்சியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அங்கிருந்த ஆசிரம நிர்வாகி ம.பிரபானந்தா (41) போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலறிந்த பல்லாவரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்துச் சென்றனர். ஆனால் அதற்குள் அந்த நபர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.
இதையடுத்து போலீசார், அந்தப் பகுதியில் கல் வீச்சு சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.