சீர்காழி: சீர்காழி ஸ்ரீ திருவிக்கிரம நாராயண பெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் பெருமாளை வழிபாடு செய்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்துவைக்கப்பட்ட 108 திவ்யதேசங்களில் 28 ஆவது ஸ்தலமான ஸ்ரீ திருவிக்கிரம நாராயணபெருமாள் எனும் தாடாளன் பெருமாள் கோயில் அமைந்துள்ளது.
சொர்க்க வாசல் வழியே வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள்.
இக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாளுக்கு திங்கள்கிழமை அதிகாலை சிறப்பு திருமஞ்சனம், சாத்துமுறை நடைபெற்றது. தொடர்ந்து ஸ்ரீதேவி, பூதேவியருடன் பெருமாள் ரத்தின அங்கி அலங்காரத்தில் கோயில் வசந்த மண்டபத்தில் எழுந்தருள திருமங்கையாழ்வாரின் மங்களாசாசன பாசுரங்கள் பாடப்பட்டு சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றது.
இதையும் படிக்க | ஸ்ரீரங்கம் கோயிலில் பரமபதவாசல் திறப்பு
பின்னர் மேள, தாளங்கள் முழங்க ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாடாளன்பெருமாள் சொர்க்கவாசல் அருகே எழுந்தருளினார். அங்கு சொர்க்கவாசலுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து, தீபாராதனை காட்டப்பட்டது.
பின்னர் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு அவ்வழியே ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன், பெருமாள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
சீர்காழி தாடாளன் பெருமாள் கோயிலில் வைகுந்த ஏகாதசி திருவிழாவில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத தாடாளன்பெருமாளை தரிசிக்கும் பக்தர்கள்.
ஆண்டுக்கு ஒருநாள் மட்டும் தரிசிக்க கூடிய பெருமாளின் வலது திருவடியை இன்று மட்டுமே வணங்க முடியும் என்பதால் அதிகாலை முதலே பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா காலகட்டத்தில் கட்டுபாடுகளுடன் பக்தர்கள் இன்றி சொர்க்கவாசல் திறப்பு விழா நடைபெற்ற நிலையில், இன்று திங்கள்கிழமை கட்டுபாடுகள் ஏதும் இல்லாததால் அதிக அளவில் பக்தர்கள் வந்து வழிபாடு செய்து பெருமாளை தரிசனம் செய்து வருகின்றனர்.