ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் புகார் அளிக்கலாம் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
பொங்கலுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்குவது குறித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இதன்பின்னர், தமிழகத்தில் பொங்கலுக்கு ஜனவரி 12 முதல் 14 வரை சென்னையில் இருந்து 10,749 பேருந்துகளும் பிற ஊர்களில் இருந்து 6,183 பேருந்துகளும் ஒட்டுமொத்தமாக தமிழகம் முழுவதும் 16,932 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்பின்னர் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், 'தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி 16,932 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. மாதவரம், கே.கே. நகர், தாம்பரம், தாம்பரம் சானடோரியம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பேருந்து நிலையங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
மேலும் சிறப்புப் பேருந்துகளுக்கு நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ முன்பதிவு செய்துகொள்ளலாம். கோயம்பேடு - 10, தாம்பரம் சானடோரியம் - 1, பூந்தமல்லி - 1 என 12 முன்பதிவு மையங்கள் உள்ளன. மேற்குறிப்பிட்ட 3 நாள்களில் 24*7 நேரமும் சென்னை இணைப்புப் பேருந்துகள் இயக்கப்படும்.
பேருந்து குறித்த தகவல்களை தெரிந்துகொள்ள அதுகுறித்து புகார் அளிக்க 9445014450, 9445014436 ஆகிய இரண்டு அலைபேசி எண்களுக்குத் தொடர்புகொள்ளலாம்
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் 1800 4256 151, 044 2474 9002, 044 2628 0445, 044 2628 1611 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம்' என்று தெரிவித்தார்.