கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மவார் பாளையத்தில் குடும்பத் தகராறில் கணவனை மிரட்ட மனைவியும், மனைவியை மிரட்ட கணவரும் விஷம் குடித்ததில் இருவரும் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கும்மிடிப்பூண்டி அடுத்த கம்மவார் பாளையத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியர் மாசி (60). இவரது மனைவி பூங்கொடி (55). இவர்களுக்கு பாரதி (35) என்ற மகனும், சங்கீதா (33) என்ற மகளும் உள்ளனர். சங்கீதாவிற்கு திருமணம் ஆன நிலையில் மாசி - பூங்கொடி தம்பதியர் மகன் பாரதியுடன் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் மாசி-பூங்கொடி தம்பதியருக்கு இடையே வழக்கம் போல் குடும்பத் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த பூங்கொடி அவர் வீட்டில் மறைத்து வைத்திருந்த விஷத்தை குடித்துள்ளார். அதை பார்த்த கணவன் மாசி, ‘நீ மட்டும் தான் விஷம் குடிப்பியா நானும் குடிப்பேன்’ என்று கூறியவாறு மனைவியின் கையில் இருந்த விஷப்பாட்டலை பிடுங்கி இவரும் விஷம் குடித்துள்ளார். பின் இருவரும் மயங்கினர்.
தகவல் அறிந்த மகன் பாரதி இருவரையும் உடனடியாக கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை தந்த பின்னர், இருவரும் மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று இரவு பூங்கொடி உயிரிழந்தார். தொடர்ந்து ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வந்த மாசியும் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்து கும்மிடிப்பூண்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.