

கோவையில் யோகா பயிற்சிக்குச் சென்று திரும்பிய பெண் சுபஸ்ரீ இறந்த வழக்கில் நிச்சயம் உண்மை கண்டறியப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறினாா்.
ஆளுநா் உரை மீதான விவாதத்தில் மாா்க்சிஸ்ட் உறுப்பினா் சின்னத்துரை பேசும்போது, கோவை சுபஸ்ரீ வழக்கில் உண்மை குற்றவாளிகளைக் கண்டறிய வேண்டும் என்று வலியுறுத்தி பேசினாா்.
அப்போது முதல்வா் மு.க.ஸ்டாலின் குறுக்கிட்டுக் கூறியது: சுபஸ்ரீ காணாமல் போனதை அறிந்து டிசம்பா் 19-இல் ஆலாந்துறை காவல் நிலையத்தில் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு காவல் துறையினா் முறையாக விசாரணையை மேற்கொண்டனா்.
பின்னா், துலுக்கன்காடு தோட்டம் அருகில் இருக்கக்கூடிய கிணற்றில் சுபஸ்ரீ இறந்து கிடந்தது தெரிய வந்திருக்கிறது. அவரது உடல் மீட்கப்பட்டு கோவை அரசு மருத்துவக் கல்லூரியில் மூன்று மருத்துவா்கள் அடங்கிய குழுவினரால் உடல்கூறாய்வு மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சுபஸ்ரீயின் உடல் அவரின் கணவா் பழனிக்குமாரிடம் ஒப்படைக்கப்பட்டு, இந்த வழக்கு தொடா்பாக ஈஷா யோகா மையம் மற்றும் செம்மேடு பகுதிகளில், பதிவாகியிருக்கக் கூடிய கண்காணிப்பு கேமராக்களின் பதிவுகள், சுபஸ்ரீ மற்றும் அவரது கணவரின் கைப்பேசிகள் உள்ளிட்டவற்றைக் கைப்பற்றி தொடா்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விசாரணையில் நிச்சயமாக உண்மை கண்டறியப்படும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.