காவலர் குடும்பங்களுடன் முதல்வர் ஸ்டாலின் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாட்டம்!
சென்னை: சென்னை கொண்டித்தோப்பு பகுதியில் உள்ள காவலர் குடியிருப்பு வளாகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பொங்கல் கொண்டாடினார்.
தமிழர் திருநாளாம் தை திருநாள், தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை உற்சாகத்துடன் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தமிழர்களின் பண்பாடு மற்றும் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில், தமிழ்நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக, வீடுகளில் வண்ண வண்ண தோரணங்கள் கட்டி, புதுப்பானையில் புத்தரிசிப் பொங்கலிட்டு, பொங்கலோ பொங்கலோ என மகிழ்ச்சி பொங்க மக்கள் கொண்டாடி வருகின்றனர்.
பின்னர், கடவுளுக்கு படைத்த பொங்கலை அருகில் இருந்தவர்களுக்கு பரிமாறி மகிழ்ந்தனர்.
தமிழ்நாடு மட்டுமின்றி தமிழ்மக்கள் வசிக்கும் உலகின் அனைத்து பகுதிகளிலும் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சென்னை கொண்டித்தோப்பு காவலர்கள் குடியிருப்பில், காவலர்கள் குடும்பத்தினருடன் பொங்கல் விழாவினை முதல்வர் மு.க.ஸ்டாலின் குடும்பத்துடன் கொண்டாடினார்.
பின்னர், காவலர் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசுகைளை வழங்கி வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்க பதிவில், வெளியில் மழை பாராமல் மக்களைக் காக்கும் காவல்துறையினரோடு, மண்ணைக் காக்கும் பொங்கல் விழாவைக் கொண்டாடினேன்.
சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி மக்களைக் காக்கும் காவலரை எந்நாளும் காப்போம் என கூறியுள்ளார்.