கம்பம்: தேனி மாவட்டம், குள்ளபுரம் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி 4 -ஆம் ஆண்டு மாணவர்கள் கிராம தங்கல் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒரு பாகமாக அனுமந்தன்பட்டியில் மலர் சாகுபடியில் உள்ள விவசாயிகளுக்கு ரோஜா பூவின் ஆயுட்காலத்தை நீட்டிக்கும் முறைகள் குறித்து செயல்விளக்கம் அளித்தனர்.
இதுகுறித்து மாணவர்கள் விவசாயிகளிடம் கூறியதாவது, ரோஜா பூவை செடியிலிருந்து பறித்து அதனை சேமித்து விற்பனைக்கு அனுப்பும் முன்பே அவை வாடிவிடுகின்றன. இதனால் பூக்களின் விலை குறைக்கப்பட்டு குறுகிய லாபத்தை மட்டுமே ஈட்ட முடியும். எனவே, ரோஜா பூக்களை செடியில் இருந்து பறித்த உடனேயே அதனை 3 முதல் 5 சதவீதம் அளவுள்ள சர்க்கரை கலந்த நீரில் பூவின் காம்பு படும்படி வைக்கவும். இதனால் பூக்களின் வாடல் குறையும். அதனை விற்பனை செய்து அதிக லாபம் ஈட்டலாம் என்று கூறினர்.
செயல் விளக்கத்தினை கம்பம் குழு மாணவர்களான சக்திவேல், காளிராஜன், ஆல்பின் சாபு, நந்தகுமார், மோகன், சிவனேசன், மணி கிருக்ஷ்ணா, மூவேந்திரன், ராஜா, விஜய் ஆனந்த், ஸ்ரீ கோகுல், மற்றும் கார்த்திகேயன் விளக்கினர்.