பூம்புகார்: மூதாதையர் நினைவாக அமாவாசை அன்று தர்ப்பணம் செய்து வழிபடுவது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.
மாதந்தோறும் வரும் அமாவாசையில் தர்ப்பணம் செய்து வழிபட முடியாதவர்கள் தை, ஆடி மற்றும் மகாளய பட்ச அமாவாசை தினங்களில் வழிபட்டால் ஆண்டு முழுவதும் வழிபட்ட பலன் கிடைப்பதாக வேதங்கள் விளக்குகின்றன.
காவிரி கடலோடு சங்கமிக்கும் பூம்புகாரில் தர்ப்பணம் செய்து வழிபட்டால் காசிக்குச் சென்று வழிபட்டதாக காவிரி மகாமத்யம் என்ற நூல் விளக்குகிறது. சனிக்கிழமை தை அமாவாசையையொட்டி அதிகாலை முதலே தமிழகம் முழுவதுமே ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவிரி கரை மற்றும் கடலில் புனித நீராடி தனது மூதாதையர் நினைவாக தர்ப்பணம் செய்து வழிபட்டனர்.
சுமங்கலி பெண்கள் எலுமிச்சம்பழம், வெற்றிலை, பாக்கு, தேங்காய், மஞ்சள் உள்ளிட்ட பொருள்களை காவிரியில் இட்டு வழிபட்டனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பூம்புகார் போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகரத்தினம் தலைமையில் போலீசார் செய்திருந்தனர். ஊராட்சி மன்றத் தலைவர் சசிகுமார் மேற்பார்வையில் தூய்மைப் பணிகள் செய்யப்பட்டன.