வாழப்பாடி: வாழப்பாடி புதுப்பாளையம் மற்றும் சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோயிலில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டம், வாழப்பாடி புதுப்பாளையம் மற்றும் சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோயிலில் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் இருவர், வெள்ளிக்கிழமை இரவு உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களிடையே பீதி ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து வாழப்பாடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் இரண்டு மாதங்களுக்கு முன் மர்ம நபர்கள் கிராம கோயில்களில் பூட்டை உடைத்து, உண்டியலில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.
இதனையடுத்து, வாழப்பாடி போலீசார் இரவு நேர ரோந்து பணி அதிகரித்ததால், கோவில் உண்டியல் திருட்டு கட்டுக்குள் வந்தது.
சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் கோயிலில் பூட்டை உடைக்க நோட்டமிடும் முகமூடி கொள்ளையர்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாழப்பாடி பேரூராட்சி புதுப்பாளையம் மாரியம்மன் திருக்கோயில் மற்றும் சிங்கிபுரம் நாடார் தெரு மாரியம்மன் திருக்கோயில்களுக்கு, முகமூடி அணிந்த இருவர் கோவில் பூட்டை உடைத்து உள்ளே சென்று, உண்டியல்களை உடைத்து அதிலிருந்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர்.
இதையும் படிக்க | டிஎன்பிஎஸ்சி குரூப் 3 தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு!
புதுப்பாளையம் கோயில் உண்டியல், வாழப்பாடி ஆத்துமேடு காமராஜர் நகர் அருகே வீசப்பட்டு கிடந்தது. இதனால், இப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த வாழப்பாடி துணை காவல் கண்காணிப்பாளர் ஹரிசங்கரி, வாழப்பாடி காவல் ஆய்வாளர் உமாசங்கர் தலைமையிலான வாழப்பாடி போலீசார், இரு கோயில்களின் பார்வையிட்டதோடு, அப்பகுதியிலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள கொள்ளையர்களின் வீடியோ காட்சிகளை வைத்தும், கைரேகை நிபுணர்களை வரவழைத்து தடயங்களை சேகரித்தும், முகமூடிகள் அம்மன் கோயில் உண்டியலை உடைத்த கொள்ளையர்களை பிடிக்க தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இரு கோயில்களில் முகமூடி கொள்ளையர்கள் உண்டியலை உடைத்து பணத்தை எடுத்துச் சென்றது குறித்து தகவல் வெளியானதால், இப்பகுதி மக்கள் பீதி அடைந்துள்ளனர்.