நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் 74 ஆவது குடியரசு நாள் விழா வியாழக்கிழமை கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஆட்சியரும், காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வனும் ஏற்றுக் கொண்டனர். பின்னர் வெண்புறாக்களையும், வண்ணப்பலூன்களையும் அவர்கள் பறக்க விட்டனர். காவல் துறை அணிவகுப்பினை சிறப்பாக நடத்தியதற்காக ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படையினருக்கும், தீயணைப்புத் துறை அலுவலர்களுக்கும் ஆட்சியர் கேடயங்களை வழங்கினார்.
தொடர்ந்து, சிறப்பாக பணியாற்றிய காவல்துறை அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும், பல்வேறு அரசுத்துறைகளில் சிறப்பாக பணியாற்றிய அரசு துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் பாராட்டு நற்சான்றிதழ்களை அவர் வழங்கினார்.
இதையும் படிக்க | இன்று முதல் மாநில மொழிகளில் உச்ச நீதிமன்ற தீர்ப்புகள்!
மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 23 பயனாளிகளுக்கு ரூ.54 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார். கலைப் பண்பாட்டுத் துறை சார்பில் 15 பேருக்கு கலைமணி விருதுகள் வழங்கப்பட்டன.
சுதந்திர போராட்ட தியாகிகளை சிறப்பிக்கும் வகையில் தியாகிகளின் வாரிசுகளை சந்தித்து ஆட்சியர் மரியாதை செய்தார்.
இவ்விழாவில், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் ஆர்.சாரதா, மாவட்ட வருவாய் அலுவலர் மு.மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவகுமார், நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சாந்தா அருள்மொழி, நாமக்கல் கோட்டாட்சியர் த.மஞ்சுளா, திருச்செங்கோடு கோட்டாட்சியர் கெளசல்யா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சிவசுப்பிரமணியன் உள்பட அரசுத்துறை அலுவலர்கள், காவல்துறையினர் பலர் கலந்து கொண்டனர்.
நாமக்கல்லில் வியாழக்கிழமை நடைபெற்ற குடியரசு நாள்விழாவில் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிடும் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங். உடன், காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன்.