மத்திய அரசு தடை செய்த குஜராத் கலவரம் தொடர்பான பிபிசி ஆவணப்படத்தைப் பார்த்த சென்னை கவுன்சிலரை காவல்துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.
2002 குஜராத் கலவரம் தொடர்பான ஆவணப்படத்தை சர்வதேச ஊடகமான பிபிசி வெளியிட்டுள்ளது. இதுவரை 2 பாகங்களை வெளியாகியுள்ள இந்த ஆவணப்படத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் இந்த ஆவணப்படத்தை திரையிடுவதற்கும் அனுமதி மறுத்துள்ள மத்திய அரசின் நடவடிக்கை பலத்த அரசியல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க | பிரபல சண்டைப் பயிற்சியாளர் ஜூடோ ரத்னம் மறைவு
மேலும் பிபிசி ஆவணப்படத்தை திரையிடும் முயற்சியில் இடதுசாரி அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் சென்னை அண்ணாநகர் த.பி.சத்திரம் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து அரசியலமைப்பு சட்டத்தை பாதுகாப்போம் என முழக்கமிட்ட வாலிபர் சங்க உறுப்பினர்கள் பிபிசி ஆவணப்படத்தை சாலையோரம் அமர்ந்து பார்த்தனர்.
அவர்களுடன் பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட ஆவணப்படத்தைப் பார்த்த சென்னை மாநகராட்சி 98ஆவது மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி உள்ளிட்ட வாலிபர் சங்க உறுப்பினர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.