

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசாமி கோயிலில் இந்து சமய அறநிலைத்துறை நாகப்பட்டினம் இணை ஆணையர் மண்டலம் சார்பில் ஏழை,எளிய குடும்பங்களைச் சேர்ந்த 26 ஜோடிகளுக்கு நான்கு கிராம் தாலி மற்றும் சீர்வரிசை பொருட்களுடன் இலவச திருமணம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, இந்து சமய அறநிலைத்துறை இணை ஆணையர் பெ.குமரேசன் தலைமை வகித்தார். துணை ஆணையர் க. ராமு ,உதவி ஆணையர் ராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மன்னார்குடி நகர் மன்றத் தலைவர் மன்னை த. சோழராஜன் கலந்து கொண்டு, நாகை மற்றும் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த 26 ஜோடிகளுக்கு தாலி எடுத்துக் கொடுக்க புரோகிதர்களின் வேத மந்திரங்கள் முழங்க திருமணம் நடைபெற்றது.
மணமக்களுக்கு பட்டு வேஷ்டி, பட்டு சட்டை, மணமகள்களுக்கு பட்டுப் புடவை, ஒவ்வொருவருக்கும் நான்கு கிராம் தாலி ரூ.80 ஆயிரம் மதிப்புள்ள கட்டில், மெத்தை, பீரோ, பாத்திரங்கள் உள்ளிட்ட சீர்வரிசை பொருள்கள் இலவசமாக வழங்கப்பட்டது.
மணவிழாவிற்காக வியாழக்கிழமை மாலை மணமக்களும் மணமக்களின் குடும்பத்தினரும் மன்னார்குடிக்கு அழைத்து வரப்பட்டு தனியார் திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு வியாழக்கிழமை இரவு வெள்ளிக்கிழமை காலை உணவுகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையர் வி.நாராயணன், திமுக நகரச் செயலர் வீரா. கணேசன், மன்னார்குடி மத்திய ஒன்றியச் செயலர் சித்தேரி சிவா, நீடாமங்கலம் வடக்கு ஒன்றிய செயலாளர் கே.வி.கே.ஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் ஆர். கைலாசம், நீடாமங்கலம் ஒன்றியக் குழுத் தலைவர் சோம.செந்தமிழ்ச்செல்வன், உள்ளிட்டோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர். அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கும் மணமக்கள் குடும்பத்தினருக்கும் திருமண விருந்து உபசரிப்பு நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மன்னார்குடி கோயில் தக்கார் ப .மணவழகன், செயல் அலுவலர் எஸ்.மாதவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.