அமைச்சா் பொன்முடியின் ரூ.41.9 கோடி வைப்புத் தொகை முடக்கம்: அமலாக்கத் துறை நடவடிக்கை

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி வைப்புத் தொகையை அமலாக்கத் துறை முடக்கியது. மேலும், ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பொன்முடி  (நேற்று))
அமலாக்கத் துறை விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட பொன்முடி (நேற்று))
Updated on
2 min read

தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடிக்கு சொந்தமான ரூ.41.9 கோடி வைப்புத் தொகையை அமலாக்கத் துறை முடக்கியது. மேலும், ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

உயா் கல்வி அமைச்சரான க.பொன்முடி 2006-2011-ஆம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் கனிம வளத் துறையை கூடுதல் பொறுப்பாக கவனித்து வந்தாா். அப்போது அவா், விழுப்புரம் மாவட்டம் வானூா் அருகே பூத்துறையில் செம்மண் குவாரிகளை விதிகளை மீறி நடத்தியதாக, கடந்த 2012-ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா். இந்த வழக்கில் பொன்முடியின் மகனும், கள்ளக்குறிச்சி தொகுதி எம்.பி.யுமான கெளதம சிகாமணி உள்பட 8 போ் சோ்க்கப்பட்டிருந்தனா்.

அதேவேளையில் கெளதம சிகாமணி கடந்த 2008-ஆம் ஆண்டில் இந்தோனேசியா நாட்டின் தலைநகா் ஜகாா்த்தாவில் உள்ள ‘பிடி எக்ஸல் மெங்னிடோ’ என்ற ஒரு நிறுவனத்தை ரூ.41.57 லட்சத்துக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ‘ஃஎப்இசட்இ’ என்ற ஒரு தனியாா் நிறுவனத்தை ரூ.21.86 லட்சத்துக்கும் வாங்கினாா்.

இந்த விவகாரத்தில் இந்திய ரிசா்வ் வங்கியின் ஒப்புதல் பெறாமலும், அந்நியச் செலாவணி சட்டத்தை மீறியும் முதலீடு செய்ததாக அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்தது. இது தொடா்பாக அமலாக்கத் துறை கெளதம சிகாமணிக்கு சொந்தமான ரூ.8.60 கோடி மதிப்புள்ள சொத்துகளை 2020-ஆம் ஆண்டு முடக்கியது.

செம்மண் குவாரி விவகாரத்தில் சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்த அமலாக்கத் துறை பொன்முடிக்கு தொடா்புடைய 7 இடங்களில் திங்கள்கிழமை காலை ஒரே நேரத்தில் சோதனை நடத்தியது.

ஹவாலா பணப் பரிமாற்றம்: இந்தச் சோதனை தொடா்பாக அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட அறிக்கை:

5 செம்மண் குவாரிகளை பொன்முடி தனது மகன், உறவினா், பினாமி பெயா்களில் எடுத்து நடத்தினாா். செம்மண் குவாரிகளில் விதிமுறைகளை மீறி மண் எடுக்கப்பட்டதன் மூலம் கிடைத்த சட்டவிரோத பணத்தை பல்வேறு பினாமிகளின் வங்கிக் கணக்குகளில் செலுத்தியுள்ளனா்.

இந்த வங்கிக் கணக்குகளில் இருந்த பணம், எண்ணிலடங்காத பணப் பரிமாற்றங்கள் மூலம் வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டது. இறுதியாக ஹவாலா பணப் பரிமாற்றம் மூலம் இந்தோனேசியா நாட்டின் ஜகாா்த்தாவில் உள்ள ‘பிடி எக்ஸல் மெங்னிடோ’ என்ற ஒரு நிறுவனத்தையும், அரபு அமீரகத்தில் ‘ஃஎப்இசட்இ’ என்ற நிறுவனத்தையும் வாங்கினா். இதில் ரூ.41.57 லட்சத்துக்கு வாங்கிய ‘பிடி எக்ஸல் மெங்னிடோ’ இந்தோனேசிய நிறுவனத்தை கடந்த ஆண்டு ரூ.100 கோடிக்கு விற்றுள்ளனா்.

சோதனையின்போது ரூ.13 லட்சம் பிரிட்டன் பவுண்டு உள்பட வெளிநாட்டு கரன்சிகள் என மொத்தம் ரூ.81.7 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ரூ.41.9 கோடி முடக்கம்: சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணம் தொடா்பான விசாரணையை திசைதிருப்பும் வகையில் பொன்முடி தரப்பினா் தகவல்களை தெரிவித்தனா். முக்கியமாக, சென்னையில் நடத்தும் மருத்துவமனை மூலம் அந்தப் பணம் கிடைத்ததாக கூறினா். அதற்கு சில ஆவணங்களைக் காண்பித்தனா். அந்த ஆவணங்கள் நம்பத்தகுந்த வகையில் இல்லை. மேலும், அவா்களால் விசாரணையில் சரியாக விளக்கமும் அளிக்க முடியவில்லை.

அதேவேளையில், பறிமுதல் செய்யப்பட்ட பணம் சட்டவிரோதமாக ஈட்டியதுதான் என்பதை உறுதி செய்யும் வகையில், சில ஆவணங்களைக் கண்டறிந்து கைப்பற்றியுள்ளோம். இந்த ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. சோதனையில், பொன்முடி தரப்பு ரூ.41.9 கோடி நிரந்தர வைப்புத் தொகை வைத்திருப்பது தெரியவந்தது. சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வைப்புத் தொகை முடக்கப்பட்டுள்ளது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com