திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரத்தில் மோசடி பத்திரப் பதிவு செய்ததாக எழுந்த புகாரின் பேரில் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏவின் மகன் நயினார் பாலாஜி உள்ளிட்டோர் செய்த பத்திரப்பதிவை ரத்து செய்தது பத்திரப்பதிவுத் துறை.
திருநெல்வேலி சட்டப்பேரவை தொகுதி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜி, இளையராஜா மற்றும் ராதாபுரம் சார்பதிவாளர் சேர்ந்து கூட்டு சதி செய்து, சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த ஒப்பந்த பத்திரப்பதிவு மோசடி ஆவணம் என புகார் எழுந்தது.
இதையும் படிக்க | என் இதயம் நொறுங்கிவிட்டது: முதல்வர் மு.க.ஸ்டாலின் வேதனை
ஜூலை 2022 இல் நடைபெற்ற இந்த ஒப்பந்த பத்திரப்பதிவு குறித்து அறப்போர் இயக்கம் ஆதாரங்களுடன் ஏப்ரல் 2023 இல் தமிழக தலைமைச் செயலர், பத்திரப்பதிவுத் துறை அமைச்சர், பத்திரப்பதிவுத் துறை செயலர்கள் மற்றும் சென்னை காவல் துறை ஆணையர் என அனைவருக்கும் புகார் அனுப்பியிருந்தது.
அதன் மீது விசாரணை மேற்கொண்ட திருநெல்வேலி மண்டல பத்திரப்பதிவுத் துறை துணைத் தலைவர், இது மோசடி ஆவணம் என்பதற்கான முகாந்திரம் இருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது பத்திரப்பதிவுத் துறை இது மோசடி ஆவணம் என்று ஆணையிட்டு இந்த ஒப்பந்த பத்திரப்பதிவை ரத்து செய்துள்ளது.