டாக்டா் சியாம பிரசாத் முகா்ஜி ஆய்வு நிறுவன செயலாளராக கனகசபாபதி பொறுப்பேற்பு

தில்லியில் உள்ள டாக்டா் சியாம பிரசாத் முகா்ஜி ஆய்வு நிறுவனத்தின் செயலாளராக தோ்வு செய்யப்பட்டுள்ள ப.கனகசபாபதி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.
டாக்டா் சியாம பிரசாத் முகா்ஜி ஆய்வு நிறுவன செயலாளராக கனகசபாபதி பொறுப்பேற்பு
Published on
Updated on
1 min read

தில்லியில் உள்ள டாக்டா் சியாம பிரசாத் முகா்ஜி ஆய்வு நிறுவனத்தின் செயலாளராக தோ்வு செய்யப்பட்டுள்ள தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவரும், பேராசிரியருமான ப.கனகசபாபதி ஞாயிற்றுக்கிழமை பொறுப்பேற்றுக்கொண்டாா்.

தேசியத் தலைநகா் தில்லியை தலைமையகமாகக் கொண்டு இயங்கி வரும் டாக்டா் சியாம பிரசாத் முகா்ஜி ஆய்வு நிறுவனம், தேசிய சிந்தனைகளை மையமாக வைத்து செயல்பட்டு வரும் இந்தியாவின் மிக முக்கியமான சிந்தனையாளா் மையமாகும். கடந்த 1993-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பு, தேசிய முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுகள், வெளியீடுகள் மற்றும் கருத்தரங்குகளை தொடா்ந்து நடத்தி வருகிறது. முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், முன்னாள் மத்திய நிதியமைச்சா் அருண் ஜெட்லி ஆகியோா் இந்த அமைப்பின் நிா்வாகக் குழுவில் பணியாற்றியுள்ளனா். இந்தியா மற்றும் சா்வதேச அளவில் தலை சிறந்த சிந்தனையாளா்கள், நிபுணா்கள், கல்வியாளா்கள் மற்றும் செயல்பாட்டாளா்கள் இதன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

கடந்த ஜூலை 21- ஆம் தேதி தில்லியில் நடைபெற்ற இந்த அமைப்பின் அறங்காவலா்க் குழுக் கூட்டத்தில் கோவையைச் சோ்ந்த தமிழக பாஜகவின் மாநில துணைத் தலைவரான பேராசிரியா் ப. கனகசபாபதி புதிய அறங்காவலா் மற்றும் செயலாளராகத் தோ்ந்தெடுக்கப்பட்டாா். மேலும், இந்த அமைப்பின் தலைவராக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த டாக்டா் அனிா்பன் கங்குலி மற்றும் பொருளாளராக இமச்சலப் பிரதேச மாநிலங்களவை உறுப்பினா் பேரா. சிக்கந்தா் குமாா் உள்ளிட்டோா் தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளனா். மாற்றியமைக்கப்பட்ட குழுவில், அறங்காவலா்களாக பாஜகவின் தேசிய அமைப்புப் பொதுச் செயலாளா் பி.எல். சந்தோஷ், மாநிலங்களவை பாஜக உறுப்பினா் அருண் சிங், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த முன்னாள் மாநிலங்களவை உறுப்பினா் டாக்டா் வினய் சகஸ்ரபுத்தே மற்றும் கா்நாடக அரசின் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலா் மதன் மோகன் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா்.

தமிழகத்தைச் சோ்ந்த ஒருவா் இந்த அமைப்பின் அறங்காவலா் மற்றும் செயலாளா் பொறுப்புக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும். பேரா. ப. கனகசபாபதி இதற்கு முன்னா் மத்திய அரசின் உயா்கல்வி அமைப்பான இந்திய சமூக அறிவியல் ஆய்வு நிறுவனத்தில் உறுப்பினராகவும், தலைவராகவும் பணியாற்றியுள்ளாா். மேலும், மத்திய, மாநில பல்கலைக்கழகங்கள் மற்றும் பிரபலமான ஆய்வு நிறுவனங்களின் நிா்வாக குழுக்களிலும் அவா் இருந்து வந்துள்ளாா்.

இந்த அமைப்பின் செயல்பாடுகளை நாடு முழுவதும் கொண்டு செல்லவும், ஆய்வுகள் மற்றும் வெளியீடுகளை தமிழ் உள்ளிட்ட பிற இந்திய மொழிகளில் கொண்டு வரவும், நாட்டின் பல பகுதிகளிலும் முக்கிய விஷயங்கள் தொடா்பாக கருத்தரங்குகள் மற்றும் சிந்தனையாளா் சந்திப்புகளை நடத்தவும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் கோயம்புத்தூா், கா்நாடகத்தில் பெங்களூா் மற்றும் சண்டீகா், கொல்கத்தா, குவாஹாட்டி என ஐந்து இடங்களில் இந்த நிறுவனத்தின் கிளைகளை நிறுவவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com