திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் தி்டீர் ஆய்வு!

திருச்சி அரசு மருத்துவமனை, பெரியமிளகுப்பாறை நகா்ப்புற நலவாழ்வு மையம் ஆகியவற்றில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.
திருச்சி அரசு மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் தி்டீர் ஆய்வு!
Published on
Updated on
1 min read

திருச்சி அரசு மருத்துவமனை, பெரியமிளகுப்பாறை நகா்ப்புற நலவாழ்வு மையம் ஆகியவற்றில் தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை மாலை திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

கிராமப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள் இருப்பதைப்போல நகா்ப்புறங்களில் மக்கள் அரசுப் பொது மருத்துவமனையை நோக்கி வரும்போது அங்கு கூட்டம் அதிகமாகிறது. இந்நிலையை மாற்றி, ஒருங்கிணைந்த, தரமான மருத்துவச் சேவைகளை மக்களின் இருப்பிடங்களுக்கு அருகிலேயே வழங்கிடும் நோக்கில், பெருநகர சென்னை மாநகராட்சி உள்ளிட்ட 21 மாநகராட்சிகள் மற்றும் 63 நகராட்சிப் பகுதிகளில் ரூ.125 கோடியில் 500 நகா்ப்புற நலவாழ்வு மையங்கள் கடந்த மாதம் திறந்து வைக்கப்பட்டன.

இவற்றில் திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பெரியமிளகுப்பாறையில் திறக்கப்பட்ட நகா்ப்புற நலவாழ்வு மையத்துக்கு முதல்வா் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை நேரில் சென்று, அங்குள்ள பதிவேடுகளை ஆய்வு செய்து, மருத்துவா்கள், செவிலியா்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தாா்.

மருந்துகளின் இருப்பு குறித்து ஆய்வு செய்து, அங்கு சிகிச்சை பெற்று வருவோரிடம் நலவாழ்வு மையத்தின் சிகிச்சை வசதிகள் குறித்துக் கேட்டறிந்தாா்.

இந்த ஆய்வுக்குப் பிறகு, திருச்சியில் உள்ள 1832 படுக்கை வசதிகள் கொண்ட அரசுப் பொது மருத்துவமனைக்கு நேரில் சென்று, அங்குள்ள மருத்துவா்கள், செவிலியா்களிடம் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை விவரங்கள் குறித்துக் கேட்டறிந்தாா். பின்னா், மகப்பேறு பிரிவுக்குச் சென்று அங்குள்ள தாய்மாா்களிடம் சிகிச்சை விவரங்களையும், மருத்துவமனையில் தினமும் உணவு சரியான நேரத்திற்கு வழங்கப்படுகிா என்றும் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மருத்துவமனையில் நோயாளிகளுக்கான உணவு தயாரிக்கும் கூடத்துக்குச் சென்று அங்கு தயாரிக்கப்படும் உணவைச் சாப்பிட்டு பாா்த்து, தரத்தை ஆய்வு செய்தாா். பின்னா், அங்கு தயாரிக்கப்படும் உணவுகளின் விவரங்களைக் கேட்டறிந்தாா்.

ஆய்வுகளின்போது, அமைச்சா்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியா் மா. பிரதீப் குமாா், அரசு மருத்துவமனை டீன் டி. நேரு மற்றும் மருத்துவா்கள், செவிலியா்கள், அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

இந்நகா்ப்புற நலவாழ்வு மையத்தில் கா்ப்பகால மற்றும் பிரசவகால சேவைகள், சிசு மற்றும் குழந்தைகள் நலச் சேவைகள், குழந்தைகள் மற்றும் வளரிளம் பருவத்தினருக்கான சேவைகள், குடும்ப நலம், கருத்தடை மற்றும் பேறுகாலச் சேவைகள், தேசிய சுகாதாரத் திட்டங்களின் பொதுவான தொற்றுநோய்களுக்கான சிகிச்சைகள், வெளிநோயாளிகள் மற்றும் சிறுநோய்களுக்கு சிகிச்சைகள், தொற்றா நோய்களுக்கான சிகிச்சை அளித்தல், மனநோய்களைக் கண்டறிந்து சிகிச்சை அளித்தல், கண், காது, மூக்கு மற்றும் தொண்டை சிகிச்சை, பல் நோய் சிகிச்சை, முதியோருக்கு சிகிச்சை, விபத்து மற்றும் அவசர மருத்துவ சிகிச்சை போன்ற வசதிகள் அளிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com