சங்கரன்கோவில் தேரோட்டம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சங்கரன்கோவிலில் உள்ள சங்கரநாராயணசாமி கோயில் அடித்தவசுத் திருவிழாவையொட்டி 9ஆம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்துத் தேர் இழுக்கின்றனர்.
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயணசாமி கோயிலில் ஆடித்தவசுத் திருவிழா ஜூலை 21ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் இரவில் அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வருகிறார்.
9ஆம் திருநாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. முன்னதாக அதிகாலை 5 மணியளவில் கோமதி அம்பாள் தேருக்கு எழுந்தருளினார்.இதைத் தொடர்ந்து கோமதி அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றதும் காலை 10.30 மணி அளவில் தேரோட்டம் தொடங்கியது. இதில் திரளான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
தேரோட்டத்தைக் காண பல்லாயிரக்கணக்கானோர் ரத வீதிகளில் நின்று கோமதி அம்மனை தரிசித்து வருகின்றனர்.
இதைத்தொடர்ந்து ஆடித்தவசுத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடித்தவசு காட்சி ஜூலை 31ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் லட்சக் கணக்கில் பக்தர்கள். குவிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.