

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவை நேரில் சந்தித்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவருக்கு பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார்.
ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்துள்ள இளையாராஜா இன்று 80-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவருக்கு உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள இளையராஜாவின் ஸ்டுடியோவுக்கு நேரில் சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், பொன்னாடை அணிவித்து பிறந்த நாள் வாழ்த்தை தெரிவித்தார்.
இதுகுறித்து டிவிட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின்,
“காலைப் பொழுது இனிதாய் மலர, பயணங்கள் இதமாய் அமைய, மகிழ்ச்சிகள் கொண்டாட்டமாய் மாற, துன்பங்கள் தூசியாய் மறைய, இரவு இனிமையாய்ச் சாய தமிழ்நாட்டின் தேர்வு 'இசைஞானி' இளையராஜா.
அவர் இசைக்கருவிகளை மீட்டுவதில்லை, நம் இதயங்களை வருடுகிறார். அவரே உணர்வாகி நம்முள் உருகுகிறார். தமிழ்த்திரையுலகில் மட்டுமல்ல இசை உலகுக்கே அவர் ஒரு புரட்சி.
அதனால்தான், அவரது இசையின் நுட்பத்தை ஆழ்ந்து இரசித்து, அவரை 'இசைஞானி' எனப் போற்றினார் முத்தமிழ் வித்தகர் கருணாநிதி. இசை கொண்டு அவர் நிகழ்த்தும் மாய வித்தையில் மனம் மயங்கிச் சொக்கிக் கிடக்கும் இரசிகனாக, உங்களில் ஒருவனாக அந்த மாபெரும் கலைஞனுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி மகிழ்ந்தேன். எங்கள் இதயங்களில் கோட்டை கட்டிக் கொடி நாட்டியிருக்கும் நீங்கள் எப்போதும் இராஜாதான். வாழ்க நூறாண்டுகள் கடந்து.” என்று புகைப்படங்களை பகிர்ந்து பதிவிட்டுள்ளார்.
இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் பொன்முடி, கே.என்.நேரு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.