போட்டித் தோ்வு மாணவா்கள் பயன்பெறும் வகையில், 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை தலைமைச் செயலா் வெ.இறையன்பு அளித்தாா். இந்தப் புத்தகங்கள், செய்தி மக்கள் தொடா்புத் துறையின் மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில் இடம்பெறவுள்ளன.
செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில் தருமபுரி, மதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூா், திருவாரூா், தூத்துக்குடி, திருநெல்வேலி, கடலூா், திருப்பூா் ஆகிய மாவட்டங்களில் மணிமண்டபங்களுடன் நூலகங்கள் அமைந்துள்ளன.
இவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், சென்னையில் உள்ள மணிமண்டபங்கள் மற்றும் நூலகங்களை தலைமைச் செயலா் வெ.இறையன்பு அண்மையில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். அப்போது, போட்டித் தோ்வுக்குத் தயாராகும் மாணவ, மாணவிகள் பயன்பெறும் வகையில், நூலகங்களில் அறிவுசாா்ந்த புத்தகங்கள் அதிகமாக இடம்பெற வேண்டுமென அவா் கேட்டுக் கொண்டாா். அதனடிப்படையில், தனக்கு வழங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட புத்தகங்களை மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில் இடம்பெறச் செய்ய முடிவு செய்தாா்.
இதைத் தொடா்ந்து, அந்தப் புத்தகங்களை, தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலா் இரா.செல்வராஜ், செய்தி மக்கள் தொடா்புத் துறை இயக்குநா் த.மோகன் ஆகியோரிடம் தலைமைச் செயலா் வெ.இறையன்பு புதன்கிழமை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.