
கிருஷ்ணகிரி அருகே, மின் கசிவு காரணமாக நேரிட்ட தீ விபத்தில், பண்ணையில் இருந்த 4 ஆயிரம் கோழிக்குஞ்சுகள் தீயில் கருகி பலியாகின.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த சிங்காரப்பேட்டை அருகே உள்ள நார்சாம்பட்டி பகுதியில் ராஜசேகர் (50). விவசாயி. இவர் கோழி பண்ணை நடத்தி வருகிறார்.
நேற்று இரவு கோழிப்பண்ணைக்கு வளர்ப்புக்காக 4000 கோழி குஞ்சுகளை இறக்கி உள்ளார். இந்த நிலையில் இன்று காலை 8 மணி அளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மீண்டும் அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் கோழிப் பண்ணையில் இருந்து மின் ஒயர்கள் தீ பற்றி எரிய தொடங்கியதில் கோழிப்பண்ணை முழுவதும் எரிந்து தீயில் கருகியது.
பண்ணையில் இருந்த 4000 கோழி குஞ்சுகள், மற்றும் கோழி தீவனங்கள் உட்பட சுமார் 12 லட்ச ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீ விபத்தால் நாசமாகின. இதுகுறித்து ஊத்தங்கரை தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், ஒரு மணி நேர போராட்டத்திற்குப் பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இச்சம்பவம் குறித்து சிங்காரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...