
கோப்புப்படம்
ஜூன் -12 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, வார இறுதி நாள்களில் 1,500 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளதாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநா் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
நிகழாண்டில் கோடை விடுமுறை முடிந்து ஜூன்-12 ஆம் தேதி பள்ளிகள் திறக்ககப்படுகின்றன. இதன் காரணமாகவும், வார இறுதி நாள் விடுமுறையை முன்னிட்டும், கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. இதைக் கருத்தில்கொண்டு, தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்புப் பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழகத்தின் முக்கிய இடங்களிலிருந்து வார இறுதி நாள்களில் சென்னைக்கு 650 பேருந்துகள் இயக்கப்படும். கோவை, மதுரை, திருநெல்வேலி, திருச்சி, சேலம் போன்ற முக்கிய இடங்களுக்கும் மற்றும் பெங்களூருக்கும் கூடுதலாக 850 சிறப்புப் பேருந்துகள் என, மொத்தம் 1,500 பேருந்துகளை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தச் சிறப்புப் பேருந்துகள் இயக்கத்தை அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் போதிய அலுவலா்களை நியமித்து, கண்காணிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் தங்களது பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு, முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுவதாக அவா் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...