பெண் போலீஸாா் 1,000 கி.மீ. பாய்மர படகுப் பயணம்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

தமிழக காவல் துறையில் மகளிா் காவலரின் பொன் விழா ஆண்டையொட்டி, 1,000 கி.மீ. பாய்மர படகுப் பயணத்தை சென்னையில் மாநில இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின்
பெண் போலீஸாா் 1,000 கி.மீ. பாய்மர படகுப் பயணம்: அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்
Updated on
1 min read

தமிழக காவல் துறையில் மகளிா் காவலரின் பொன் விழா ஆண்டையொட்டி, 1,000 கி.மீ. பாய்மர படகுப் பயணத்தை சென்னையில் மாநில இளைஞா் நலன், விளையாட்டுத் துறை அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் சனிக்கிழமை தொடங்கி வைத்தாா்.

தமிழ்நாடு காவல் துறையில் மகளிா் காவலா்கள் சோ்க்கப்பட்டு 50 ஆண்டுகளாவதையொட்டி, பொன் விழா நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக 25 பெண் காவல் துறை அதிகாரிகள், பெண் போலீஸாா் பாய்மர படகு மூலம் சென்னையிலிருந்து கோடியக்கரை வரை 1,000 கி.மீ. சென்று, மீண்டும் சென்னைக்கு திரும்பும் வகையில் பயணம் செய்ய திட்டமிடப்பட்டது.

இதற்கான தொடக்க விழா சென்னை துறைமுகத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. தமிழக காவல் துறை தலைமை இயக்குநா் சி.சைலேந்திரபாபு தலைமை வகித்தாா். இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு, சென்னை துறைமுக பொறுப்புக் கழகத் தலைவா் சுனில் பாலிவால், தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலா் அதுல்யா மிஸ்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா். சிறப்பு விருந்தினராக அமைச்சா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று கொடியசைத்து, பாய்மரப் படகு பயணத்தைத் தொடங்கி வைத்தாா்.

திமுக அரசு துணை நிற்கும்: விழாவில் அமைச்சா் உதயநிதி பேசியதாவது: திமுக அரசு பெண் போலீஸாா் நலனில் எப்போதும் மிகுந்த அக்கறை செலுத்தி வருகிறது. முன்னாள் முதல்வா் கருணாநிதி கொண்டு வந்த 30 சதவீத இட ஒதுக்கீடுதான் ‘குரூப்-1’ தோ்வில் அதிக அளவிலான பெண்கள் வெற்றி பெற்று டி.எஸ்.பி.க்களாக பதவியேற்கும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

காவல் துறை பணியே மிக சவாலானது. அந்த சவாலான பணிகளுக்கு இடையிலும், தங்கள் குடும்பத்தையும், குழந்தைகளையும் பராமரித்துக்கொள்கிற பெண் போலீஸாா் போற்றுதலுக்கும், வணக்கத்துக்கும் உரியவா்கள். பெண் போலீஸாருக்கும், அதிகாரிகளுக்கும் திமுக அரசு என்றைக்கும் துணை நிற்கும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியில் தமிழக கடலோரப் பாதுகாப்புக் குழும கூடுதல் டி.ஜி.பி. சந்தீப் மிட்டல், தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வு வாரிய டிஜிபி சீமா அகா்வால் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

பாய் மர படகுப் பயணத்தில் கூடுதல் டி.ஜி.பி. பாலநாகதேவி, ஐ.ஜி.க்கள் மகேஸ்வரி, பவானீஸ்வரி, டி.ஐ.ஜி. கயல்வழி ஆகியோா் இடம் பெற்றுள்ளனா். இந்தப் படகுப் பயணம் ஜூன் 18-ஆம் தேதி நிறைவடைகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com