பொறுப்புள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு இது அழகல்ல: மு.க. ஸ்டாலின்

கேள்விகள் கேட்பது பொறுப்புள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு அழகல்ல என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.
பொறுப்புள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு இது அழகல்ல: மு.க. ஸ்டாலின்

திருச்சி: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்து மத்திய அரசுதான் அறிவித்தது. பிரதமர் மோடி வந்து அடிக்கல் நாட்டினார். எனவே, இந்த திட்டத்தை அவர்கள்தான் செயல்படுத்த வேண்டும். இது பற்றி கேள்விகள் கேட்பது பொறுப்புள்ள மத்திய அமைச்சர் அமித் ஷாவுக்கு அழகல்ல என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறினார்.

சேலம் மாவட்டத்தில் அமைந்துள்ள மேட்டூர் அணையில் இன்று டெல்டா பாசனத்துக்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தண்ணீர் திறந்துவிட்டார்.

நிகழ்ச்சிக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்தார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.

தமிழ்நாட்டிற்கு ஏராளமான திட்டங்களை பாஜக அரசு கொடுத்திருப்பதாக அமித் ஷா அவர்கள் ஒரு பட்டியலை வெளியிட்டிருக்கிறார் என்று கேள்விக்கு தமிழக முதல்வர் அளித்த பதிலில், நான் சேலத்தில் நடந்த செயல் வீரர்கள் கூட்டத்தில் தெளிவாக பேசியிருக்கிறேன். அதாவது, பாஜக ஆட்சி இருந்தபோது, எந்த சிறப்புத் திட்டமும் இந்த ஒன்பது வருடங்களில் தமிழ்நாட்டிற்கு வரவில்லை. ஆனால் ஏற்கனவே காங்கிரஸ் உடன் கூட்டணியில் இருந்த திமுக அப்போது ஆட்சியில் இருந்த மன்மோகன் சிங் தலைமையில் இருந்த ஆட்சியில் என்னென்ன சிறப்புத் திட்டங்கள் வந்தது என்பதை பட்டியல் போட்டு நான் காண்பித்து இருக்கிறேன். அவர் அதைப் படிக்கவில்லையா? இல்லை அதைப் படித்து அதை யாரும் எடுத்துச் சொல்லவில்லையா? என்பதுதான் எனக்கு சந்தேகம். பாஜக-வினுடைய ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் என்ன செய்திருக்கிறது என்று கேள்வி கேட்டேன்.

அந்தக் கேள்விக்கு எந்த பதிலும் கிடையாது. ஆனால், காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில், அன்றைக்கு தமிழ்நாட்டிற்குக் கிடைத்ததை சொல்ல வேண்டுமென்றால், சென்னைக்கு புதிதாக கிடைத்த மெட்ரோ ரயில், தமிழுக்கு செம்மொழி தகுதி, தமிழ் செம்மொழி உயராய்வு நிறுவனம், சேது சமுத்திர திட்டம், ஒரகடத்தில் தேசிய மோட்டார் வாகன சோதனை ஆராய்ச்சி மையம், தாம்பரத்தில் தேசிய சித்த மருத்துவ ஆய்வு மையம், சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம், சென்னை துறைமுகம்- மதுரவாயல் பறக்கும் சாலை, நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், ஒகேனக்கல்லில் கூட்டுக் குடிநீர்த் திட்டம், சென்னைக்கு அருகில் கடல்சார் தேசிய பல்கலைக்கழகம், திருவாரூரில் மத்திய பல்கலைக்கழகம், கரூர், ஈரோடு, சேலம் ஆகிய மூன்று இடங்களில் சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர் தொழில்நுட்ப ஜவுளிப் பூங்கா. இவையெல்லாம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் தான் வந்தது.

இதேபோல தமிழ்நாட்டிற்கு என்ன சிறப்புக்களை கொண்டு வந்திருக்கிறது என்பதுதான் என் கேள்வி. எனவே எந்தத் திட்டத்திற்கும் தொடர்ச்சியாக நிதி ஒதுக்கீடு செய்வதை நான் கேட்கவில்லை. அனைத்து மாநிலத்திற்கும் செய்யப்படும் பொதுவான இடத்தில் தமிழ்நாடு இணைக்கப்பட்டிருப்பதைப் பற்றி நான் கேட்கவில்லை. இன்றைக்கு ஜிஎஸ்டி- யில் ஒவ்வொரு மாநிலமும் மத்திய அரசிற்கு நிதி கொடுத்துக் கொண்டிருக்கிறது. அந்த ஜிஎஸ்டி-யில் தமிழ்நாட்டிலிருந்து அதிகமாகக் கொடுத்திருக்கிறோம். ஆனால் தமிழ்நாட்டிற்குத் தான் இன்றைக்கு மத்திய அரசு நிதி கொடுப்பதில் மிகவும் குறைவாக கொடுத்துக் கொண்டிருக்கிறது, மற்ற மாநிலங்களுக்கெல்லாம் அதிகமாக கொடுத்துக் கொண்டிருக்கிறது.  அதைத்தான் அடிப்படையாக வைத்துக் கேட்டேன். 

அதேபோல, மதுரையில் 1200 கோடி ரூபாய் மதிப்பில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் அன்றைக்கு நிதி அமைச்சராக இருந்த அருண் ஜெட்லி அவர்கள் நாடாளுமன்றத்தில் அதற்கு உறுதி கொடுத்தார், அறிவித்தார்கள். அது என்ன ஆகியது? பிரதமர் வந்து அடிக்கல் நாட்டினார். அதற்குப் பின் பலமுறை அமித் ஷா அவர்கள் தமிழ்நாட்டிற்கு வந்திருக்கிறார்கள். வந்தபோது, பணி 50 சதவீதம் முடிந்துவிட்டது, 75 சதவீதம் முடிந்துவிட்டது என்று சொல்லிவிட்டுச் சென்றாரே தவிர இதுவரைக்கும் எந்தப் பணியும் நடைபெறவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. அதையெல்லாம் மூடி மறைத்து அவர் பேசிவிட்டுச் சென்றிருக்கிறாரே தவிர, நான் கேட்ட கேள்விக்கு எதற்கும் பதில் தரவில்லை.

எய்ம்ஸ் மருத்துவமனை கொண்டுவராததற்கு திமுக தான் பதில் சொல்ல வேண்டும் என்று அமித் ஷா சொல்லியிருக்கிறாரே என்று கேட்டதற்கு, தமிழக முதல்வர் அளித்த பதிலில், திமுக ஆட்சியில் இருந்தபோது, எய்ம்ஸ் என்று ஒரு மருத்துவமனை தேவையே படவில்லை. ஏனென்றால் நம்முடைய மருத்துவக் கட்டமைப்புகள் அதிக அளவில் சிறப்பாக செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும், இதை அறிவித்தது யார்? திமுக-வா அறிவித்தது, அறிவித்தது மத்திய அரசு. அவர்கள் தான் இதைச் செய்ய வேண்டும். இந்தக் கேள்வியைக் அவர் கேட்பதே ஒரு பொறுப்புள்ள உள்துறை அமைச்சருக்கு அழகல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com