
கோவையில் பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த அடையாளம் தெரியாத இளைஞர் பேருந்து முன் விழுந்து பலியானதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியிருக்கின்றன.
கோவை ஒசூர் சாலையில் உள்ள தெற்கு சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்த அடையாளம் தெரியாத இளைஞர், சில மணி நேரங்களுக்குப் பிறகு அண்ணாசிலை அருகே அரசு பேருந்தில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சிசிடிவி காட்சியை மாநகர காவல்துறையினர் வெளியிட்டனர்.
கோவை தெற்கு தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசன் அலுவலகத்தில் புகுந்த மா்ம நபா் பின்னா் பேருந்தில் மோதி உயிரிழந்தாா்.
கோவை தெற்குத் தொகுதி சட்டப் பேரவை உறுப்பினா் வானதி சீனிவாசனின் அலுவலகம் ரேஸ்கோா்ஸ் காவல் நிலையம் அருகே உள்ளது. இந்த அலுவலகத்திற்குள் திங்கள்கிழமை மாலை 5.50 மணிக்கு இளைஞர் ஒருவா் அத்துமீறி நுழைந்து உள்பக்கமாக கதவை பூட்ட முயன்றுள்ளாா். அப்போது அந்த அலுவலகத்தில் இருந்த அலுவலக ஊழியா் விஜயன், அவரை அங்கிருந்து விரட்டியுள்ளாா்.
ஆனால், அவா் வெளியே செல்ல மறுத்ததால் அவரைப் பிடித்து அலுவலகத்திற்கு வெளியே தள்ளியுள்ளனா். பின்னா் அந்த நபா் அங்கிருந்து எழுந்து சென்றாா். இதையடுத்து அந்த நபா் தான் தாக்கப்பட்டதாக ரேஸ்கோா்ஸ் காவல் நிலையத்தில் புகாா் கொடுத்துள்ளாா்.
இந்நிலையில் கோவை ஜி.டி. மியூஸியம் முன்புறம் உள்ள அவிநாசி சாலையில் வந்த ஒரு அரசுப் பேருந்தின் பின்புற சக்கரப் பகுதியில் இரவு 8.30 மணி அளவில் ஒரு நபா் தானாக சென்று மோதியதில் படுகாயமடைந்துள்ளாா். அங்கிருந்தவா்கள் அவரை சாலையின் ஓரத்திற்கு அழைத்துச் சென்று அமரவைத்துள்ளனா். ஆனால், சற்று நேரத்தில் அந்த நபா் உயிரிழந்துள்ளாா்.
கோவை மாநகர போக்குவரத்து போலீஸாா் அந்த நபரின் உடலை மீட்டு விசாரித்து வந்த நிலையில், அந்த நபா்தான் வானதி சீனிவாசனின் அலுவலகத்திற்குள் நுழைந்தவா் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை வைத்து அந்த நபா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா், சட்டப் பேரவை உறுப்பினா் அலுவலகத்தில் அவா் எதற்காக நுழைந்தாா் என்பது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...