
கோப்புப் படம்
தமிழகத்தில் 18,19ஆம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட அறிக்கையில்,
நேற்று ஜூன் 14 வடகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய மிகத்தீவிர புயல் பிபர்ஜாய் வடகிழக்கு நகர்ந்து இன்று காலை 8.30 மணியளவில் அதே பகுதிகளில், ஜக்காவு துறைமுகத்திலிருந்து(குஜராத்) மேற்கு-தென்மேற்கு சுமார் 170 கி.மீ தொலைவில் போர்பந்தரில்(குஜராத்) இருந்து மேற்கு - வடமேற்கே சுமார் 290 கி.மீ தொலைவில் நிலை கொண்டுள்ளது.
இது மேலும் வடக்கு திசையிலும் நகர்ந்து சௌராஷ்டிரா-கட்ச் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பாகிஸ்தான் கடற்கரை பகுதிகளில் இன்று மாலை மிகத் தீவிர புயலாக மாண்டிவி(குஜராத்) மற்றும் கராச்சி(பாகிஸ்தான்) இடையே ஜக்காவு துறைமுகம்(குஜராத்) அருகே கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் காற்றின் வேகம் மணிக்கு 115 - 125 கி.மீ வேகத்திலும் இடையிடையே 140 கி.மீ வேகத்திலும் இருக்கக்கூடும்.
மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக,
ஜூன் 15, 16 ஆகிய தேதிகளில் வரை தமிழ்நாடு மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
ஜூன் 18ல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை மற்றும் அரியலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
படிக்க: செந்தில் பாலாஜி மனைவியின் ஆட்கொணர்வு மனு: விசாரணை தொடக்கம்
ஜூன் 19ல் திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வெப்பநிலை
ஜூன் 15 முதல் 16 வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னையை பொருத்தவரை..
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும்.
மீனவர்களுக்கு..
ஜூன் 15 முதல் 19 வரை சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும்.
இந்த நாளில் மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.