நீட் தேர்வு விலக்கு குறித்து மத்திய அரசுக்கு 2-3 நாள்களில் பதில் அளிக்கப்படும் என்று தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
தமிழ்நாட்டில் 1,44,516 மாணவர்கள் நீட் தேர்வு எழுதியதில் 78,693 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் மாணவர்களை தொலைபேசியில் அழைத்து உளவியல் ஆலோசனை வழங்க அரசு முடிவு செய்து தற்போது நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத 65,823 மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.
நீட் தேர்வில் இருந்து விலக்கு கோருவதில் மத்திய கல்வித்துறை சில விளக்கங்களை கோரியுள்ளது. அது தொடர்பாக மத்திய அரசுக்கு 2-3 நாட்களில் விளக்கம் அளிக்கப்படும். நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறுவதில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது' என்றார்.
மேலும் செந்தில் பாலாஜி குறித்து பேசிய அமைச்சர், 'செந்தில் பாலாஜி அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஓமந்தூரார் மருத்துவமனையில் மக்களுக்கு சிகிச்சை அளிப்பதில் எந்த பிரச்னையும் இல்லை. மருத்துவமனையில் அறுவை சிகிச்சைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக வந்த தகவல் தவறு. செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதால் மருத்துவர்கள் அறுவை சிகிச்சைக்கு பரிந்துரைத்துள்ளனர். அவரை தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பது அவரது குடும்பத்தினரின் தனிப்பட்ட விருப்பம், அதில் நாம் தலையிட முடியாது' என்றார்.