அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றலாம் என்றும் ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழக மின்சாரத் துறை அமைச்சா் செந்தில்பாலாஜியை சட்டவிரோத பணமோசடி வழக்கில், அமலாக்கத் துறை அதிகாரிகள் புதன்கிழமை அதிகாலை கைது செய்தனா்.
இதைத் தொடா்ந்து, அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு இதயத்தில் அடைப்பு இருப்பதாகவும், உடனடியாக பை-பாஸ் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும் தமிழ்நாடு மருத்துவக்குழு பரிந்துரைத்துள்ளது.
இதனால் புதன்கிழமை மருத்துவமனைக்கு நேரில் சென்ற சென்னை மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, செந்தில் பாலாஜியை ஜூன் 28 வரை நீதிமன்றக் காவலில் வைக்கும்படி உத்தரவிட்டார்.
ஆட்கொணர்வு மனு
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக இன்று நடைபெற்றது.
அதில் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவனைக்கு மாற்ற அவரது தரப்பு கோரிக்கை வைத்த நிலையில், அதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை அளிக்கவும், அமலாக்கத்துறை தனியாக மருத்துவக்குழு ஒன்றை ஏற்படுத்தி, அவரது உடல்நிலையை காவேரி மருத்துவமனையில் பரிசோதிக்கலாம் என்றும் கூறியுள்ளது.
ஆட்கொணர்வு மனு மீது அமலாக்கத்துறை பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் தொடர வேண்டும் என்றும் கூறி வழக்கை ஜூன் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
இதையும் படிக்க | செந்தில் பாலாஜி விவகாரம்: ஆளுநரிடம் அதிமுக நிர்வாகிகள் மனு