ஆளுநர் மாளிகையா? ஆர்.எஸ்.எஸ். அலுவலகமா? - தொல். திருமாவளவன் ட்வீட்
அமைச்சர்களின் துறைகள் ஒதுக்கீடு விவகாரத்தில் ஆளுநர் தலையிடுவது அரசியல் உள்நோக்கம் கொண்டது என விசிக தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளதால் அவர் வசம் இருந்த மின்துறை, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறைகளை இரு அமைச்சா்களுக்கு கூடுதலாக ஒதுக்க வேண்டும் என்று ஆளுநா் ஆா்.என். ரவி-க்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை பரிந்துரைக் கடிதம் அனுப்பியிருந்தாா்.
அதன்படி அமைச்சா் தங்கம் தென்னரசுக்கு மின்துறையும், அமைச்சா் முத்துசாமிக்கு மதுவிலக்கு மற்றும் ஆயத் தீா்வை துறையும் ஒதுக்கும்படி குறிப்பிட்டிருந்தார்.
ஆனால், பரிந்துரைக் கடிதத்தை பரிசீலித்த ஆளுநா் ஆா். என். ரவி, அமைச்சா் செந்தில் பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதால் மருத்துவக் காரணங்களுக்காக இலாகாவை மாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது, அவரை அமலாக்கத் துறை கைது செய்ததை கடிதத்தில் குறிப்பிடாதது ஏன்? என விளக்கம் கேட்டு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க | தீவிர சிகிச்சைப் பிரிவில் செந்தில் பாலாஜி: காவேரி மருத்துவமனை
இதற்கு திமுக கூட்டணி கட்சித் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன.
இதுகுறித்து விசிக தலைவர் தொல். திருமாவளவன் தனது ட்விட்டர் பக்கத்தில், 'அமைச்சர் செந்தில் பாலாஜி நிர்வகித்து வந்த துறைகளை இரு வேறு அமைச்சர்களிடம் ஒப்படைப்பதற்காக ஆளுநருக்குப் பரிந்துரைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின். அதனை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ளார். இது அரசமைப்புச் சட்டத்தை அவமதிக்கும் அடாவடிப் போக்காகும்.
அமைச்சர்கள் யார் யார்? அவர்களுக்கு என்னென்ன துறைகள்? என்பனவற்றைத் தீர்மானிக்கும் அதிகாரம் முதல்வருக்கே உண்டு. இதில் ஆளுநர் தலையிடுவதும் விமர்சிப்பதும் அரசியல் உள்நோக்கம் கொண்டதாகும். ராஜ்பவன் ஆளுநர் மாளிகையா? ஆர்எஸ்எஸ் அலுவலகமா? என்கிற அய்யம் எழுகிறது' என்று பதிவிட்டுள்ளார்.