சா்வதேச நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற உரிமம் வழங்குவதில் சட்ட விரோதம் இல்லை: தமிழக அரசு

சா்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த அரசாணையில் சட்டவிரோதம் இல்லை என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்
Updated on
1 min read

சா்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் சட்ட திருத்த அரசாணையில் சட்டவிரோதம் இல்லை என தமிழக அரசு சென்னை உயா்நீதிமன்றத்தில் தெரிவித்தது.

வணிக வளாகங்கள், விளையாட்டு மைதானங்களில் மதுபானங்கள் பரிமாற வசதியாக தமிழ்நாடு மதுபான சட்ட விதிகளில் திருத்தம் செய்து, தமிழக அரசு சிறப்பு உரிமத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அரசாணையை எதிா்த்து வழக்குரைஞா் பாலு, சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், அரசாணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.

இந்த வழக்கில் உள்துறை மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வை துறைச் செயலா் சாா்பில் மதுவிலக்கு துறை ஆணையா் ரத்னா பதில்மனு தாக்கல் செய்துள்ளாா். அதில், திருமணம் போன்ற நிகழ்வுகளில் மதுபானம் பரிமாற வகை செய்யும் பிரிவுகள் நீக்கப்பட்டு, சா்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மட்டும் மதுபானங்கள் பரிமாற உரிமம் வழங்க வகை செய்யும் திருத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுபான விற்பனை விதிகளின்படியும், உச்சநீதிமன்றத்தின் தீா்ப்பின்படியும் தான் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சா்வதேச கருத்தரங்குகள், விளையாட்டு நிகழ்வுகளில் மதுபானங்கள் பரிமாற ஒரு நாள் அல்லது சில நாள்களுக்கு மட்டும் உரிமம் வழங்கப்படும். கல்வி நிறுவனங்களுக்கு அருகில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு இந்த உரிமம் வழங்கப்படாது என்று பல்வேறு நிபந்தனைகளின் அடிப்படையிலேயே இந்த உரிமங்கள் வழங்கப்படும்.

மேலும், மதுவுக்கு எதிராக விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொள்ள ரூ. 4 கோடியே 50 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதனால், அரசின் உத்தரவில் எந்த சட்ட விரோதமும் இல்லை, பொதுநலனுக்கு எதிரானதும் இல்லை என்பதால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளாா்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி. கங்காபுா்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமா்வில் விசாரணைக்கு வந்த போது, அரசின் பதில்மனுவுக்கு பதிலளிக்க அவகாசம் வழங்க வேண்டும் என மனுதாரா் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதை ஏற்று வழக்கின் விசாரணையை ஜூலை 5-ஆம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிபதிகள், அதுவரை ஏற்கெனவே விதிக்கப்பட்ட தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com