இருசக்கர வாகனங்கள், கார்களுக்கான சாலைவரியை ரூ.1000 கோடியாக உயர்த்தும் மாநில அரசின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இதை குறித்து அவர் வெளியிட்டிருக்கும் செய்தி அறிக்கையில், "தமிழ்நாட்டில் இரு சக்கர வாகனங்களுக்கான சாலை வரியை, தற்போதுள்ள 8 சதவிகிதத்திலிருந்து ரூ.1 லட்சம் வரை விலையுள்ள வாகனங்களுக்கு 10 சதவிகிதமாகவும், அதற்கு கூடுதலான விலை கொண்ட வாகனங்களுக்கு 12 சதவிகிதமாகவும் உயர்த்த தமிழக அரசு திட்டம் வகுத்துள்ளது.
இதைபோல், மகிழுந்துகளுக்கான சாலை வரி, 5 லட்சம் வரையுள்ள வாகனங்களுக்கு 12 சதவிகிதமாகவும் 5 முதல் 10 லட்சம் வரை மதிப்புள்ள வாகனங்களுக்கான வரி 10 லிருந்து, 13 சதவிகிதமாகவும், 10 முதல் 20 லட்சத்துக்குட்பட்ட வாகனங்களுக்கு 15 சதவிகிதமாகவும் அதற்கும் மேற்பட்ட விலையுள்ள வாகனங்களுக்கு 20 சதவிகிதமாகவும் உயர்த்தப்படவுள்ளது.
சராசரியாக 5% அளவுக்கு விலை உயர்வு இருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. உயர்த்தப்பட்ட இந்த சாலை வரிகளின் மூலமான தமிழக அரசின் ஆண்டு வருவாய் இப்போதுள்ள ரூ.6674 கோடியிலிருந்து ரூ.1000 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த சாலை வரி உயர்வால் இரு சக்கர வாகனங்களுக்குகான விலை ரூ.16 ஆயிரம் வரையிலும், மகிழுந்துகளின் விலை லட்சக்கணக்கிலும் உயரும் அபாயம் உள்ளது. இது நியாயமானதல்ல. இந்த வரி உயர்வு ஏழை மற்றும் நடுத்தர மக்களை கடுமையாக பாதிக்கும். ஏற்கனவே இரு சக்கர வாகனங்களை தவிர மீதமுள்ள அனைத்து வாகனங்களுக்கும் சுங்கக்கட்டணம் என்ற பெயரில் மிக அதிக தொகை வசூலிக்கப்படும் நிலையில், சாலை வரிகள் ரத்து செய்யப்பட வேண்டுமே தவிர, உயர்த்தப்படக்கூடாது.
வாகனவரி வருவாய் இயல்பாகவே ஆண்டுக்கு 10% அதிகரித்து வரும் நிலையில், அதை உயர்த்த வேண்டிய தேவை இல்லை. எனவே, வாகனங்களுக்கான சாலைவரியை உயர்த்தும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்” எனக் கூறியுள்ளார்.