சென்னையில் ஜூன் மாதத்தில் அதிக மழை பெய்தது குறித்து வானிலை ஆய்வு மைய தென்மண்டலத் தலைவர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழகத்தில் சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று(ஜூன்19) விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
இதுதொடர்பாக பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள தகவலில்,
வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே சென்னையில் கனமழை பெய்வதற்கான காரணம். கடந்த 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதத்தில் அதிகளவில் பெய்துள்ளது.
தமிழகத்தை பொருத்தவரை நாளையும், நாளை மறுநாளும் மழை தொடரும். இன்று சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை நீடிக்கும்.
மேலும், அடுத்த 3 மணி நேரத்துக்கு 9 மாவட்டங்களில் மழை நீடிக்கும். சென்னை புறநகர் பகுதிகளிலும் மழை தொடரும். மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் சென்னை மீனம்பாக்கத்தில் 16 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளது. இது 73 ஆண்டுகளில் பெய்த 3வது அதிக கனமழையாகும்.
சென்னையில் இயல்பு அளவு 4 செ.மீட்டரை விட 163 சதவீதம் அதிகமாக 10.3 செ.மீ மழைப் பதிவாகியுள்ளது.
சூறாவளிக் காற்று வீசக்கூடும் என்பதால் 2 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளது.
காஞ்சிபுரபும், செம்பரம்பாக்கத்தில் 11 செ.மீ, சென்னை அண்ணா பல்கலையில் 10 செ.மீ அளவும் மழைப் பதிவாகியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.